செய்திகள்
பால் விலை உயர்வு ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வில் பெரும் சுமை - மு.க.ஸ்டாலின்
பால் விலை உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வில் பெரும் சுமையாக இருக்கும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதல் விலை மற்றும் விற்பனை விலையை உயர்த்தி தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பசும்பால் கொள்முதல் விலை ரூ. 4 உயர்ந்து ரூ.32 ஆகிறது. எருமைப்பால் கொள்முதல் விலை ரூ. 6 உயர்ந்து ரூ.41 ஆகிறது. ஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்ந்துள்ளது. இது நாளை மறுநாள் முதல் அமலுக்கு வருகிறது. இந்த விலை உயர்வால் 4.60 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன் அடைவார்கள்.
இதுதொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், பதப்படுத்தும் செலவு, போக்குவரத்து மற்றும் அலுவலகச் செலவு உயர்ந்துள்ளதால் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பால் விலை உயர்வு தவிர்க்க முடியாதது. மக்கள் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
இந்நிலையில், பால் விலை உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வில் பெரும் சுமையாக இருக்கும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பால் விலை உயர்வு என்பது ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வில் பெரும் சுமை. தரமான பால் விநியோகத்தை உறுதி செய்யவே இந்த விலை உயர்வு என்று அரசு கூறுகிறது. தரமான விநியோகம் என்பது அரசின் கடமையல்லவா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேபோல், திமுக எம் பி கனிமொழி, பால் விலை உயர்வை திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.