செய்திகள்
சேவூர்-நம்பியூர் சாலை அகலப்படுத்தும் பணிகள் தீவிரம்
மொட்டணம் பகுதியில் துவங்கி சாவக்கட்டுப்பாளையம் வரை 2.8 கி.மீ., தூரம் சாலை விரிவாக்கப்பணி தற்போது தொடங்கியுள்ளது.
அவிநாசி:
அவிநாசி நெடுஞ்சாலைத்துறை சார்பில் அவிநாசியில் இருந்து சேவூர் வழித்தடத்தில் புளியம்பட்டி செல்லும் சாலையில் ஈரோடு மாவட்ட எல்லையான ஆலத்தூர் மேடு வரை 17 கி.மீ., சாலை கடந்த 2018ம் ஆண்டு தொடங்கி படிப்படியாக அகலப்படுத்தப்பட்டது.
அதன்படி இருவழிப்பாதையாக (7 மீ. அகலம்) இருந்த இந்த சாலை 3 வழி (10.50 மீ., அகலம்) சாலையாக விரிவுபடுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சேவூரில் இருந்து நம்பியூர் வழித்தடத்தில் திருப்பூர் மாவட்ட எல்லையான மொட்டணம் வரையிலான 12.8 கி.மீ., தூர சாலையும் இருவழி பாதையில் இருந்து மூன்று வழிப்பாதையாக அகலப்படுத்தப்படுகிறது. இந்த நிதியாண்டில் பெறப்பட்ட நிதிஒதுக்கீடு அடிப்படையில் மொட்டணம் பகுதியில் துவங்கி சாவக்கட்டுப்பாளையம் வரை 2.8 கி.மீ., தூரம் சாலை விரிவாக்கப்பணி தற்போது தொடங்கியுள்ளது.