செய்திகள்
திருட்டு

பொள்ளாச்சியில் காரின் கதவை உடைத்து பணம் திருட்டு

Published On 2021-10-27 09:39 GMT   |   Update On 2021-10-27 09:39 GMT
பொள்ளாச்சியில் காரின் கதவை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் அஷ்வின் ராஜ்குமார் (வயது 28). இவர் தனியார் கார்டு நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று இவர் குடும்பத்துடன் தனது காரில் பொள்ளாச்சி அடுத்த எஸ்.எஸ். கோவில் வீதியில் உள்ள காமாட்சியம்மன் கோவிலுக்கு சென்றார்.

அங்கு காரை கோவில் முன்பு நிறுத்திவிட்டு பூஜைக்காக உள்ளே சென்றார். பின்னர் பூஜைகளை முடித்து விட்டு வெளியே வந்தார். அப்போது காரின் வலது புறம் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே பார்த்தபோது காரில் இருந்த பணம் ரூ.10 ஆயிரம் மற்றும் வங்கியின் லாக்கர் சாவியை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அஷ்வின் ராஜ்குமார் பொள்ளாச்சி போலீசில் புகார் தெரிவித்தார்.

போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். பின்னர் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அதில் 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து காரின் கதவை உடைத்து கொள்ளை அடிக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் உருவ படங்களை வைத்து அவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News