செய்திகள்
திருக்கோஷ்டியூர் அருகே வேன் கவிழ்ந்து மூதாட்டி பலி
திருக்கோஷ்டியூர் அருகே வேன் கவிழ்ந்து மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர்:
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள களிமாங்குண்டு பகுதியிலிருந்து 15-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பழனி முருகனை தரிசிக்க வேனில் புறப்பட்டனர். பிள்ளையார்பட்டி சென்று சாமி கும்பிட்டு விட்டு பழனிக்கு செல்ல திட்டமிட்டு இருந்தனர். இதற்காக அவர்கள் பிள்ளையார்பட்டி நோக்கி வந்து கொண்டு இருந்தனர். அப்போது ஜமீனதார்பட்டி அருகே கண்மாய் வளைவு பகுதியில் வேன் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் இறங்கியதால் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் இருந்த 9 பேர் காயம் அடைந்தனர். களிமங்குண்டு பகுதியை சேர்ந்த மணி என்பவரின் மனைவி ஆறுமுகம்(வயது 65) என்ற மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலியானார். காயம் அடைந்த 9 பேர் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது குறித்து திருக்கோஷ்டியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.