ஆன்மிகம்
இஸ்ரவேலர்களை சபிக்க வந்த பிலேயாம்

இஸ்ரவேலர்களை சபிக்க வந்த பிலேயாம்

Published On 2020-10-13 07:48 GMT   |   Update On 2020-10-13 07:48 GMT
தேவதூதனை பிலேயாத்தின் கண்களுக்கும் தெரியும்படி செய்த கடவுள், “எதற்காக உன் கழுதையை அடித்தாய்? உன்னைத் தடுக்கவே நான் வந்தேன்.
பாசன் நகரிலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல் மக்கள், மோவாப் எனும் வளமையான நகரம் அமைந்திருந்த யோர்தான் பள்ளத்தாக்கு நோக்கிப் பயணம் செய்தனர். பின்னர் எரிகோ எனும் பலம் பொருந்திய கோட்டை நகரின் அருகிலுள்ள யோர்தான் நதியின் இக்கரையில் தங்கள் முகாம்களை அமைத்தனர். அந்த நேரத்தில் பாலாக் என்பவன் மோவாப் நகரின் அரசனாக ஆட்சி செய்துவந்தான்.

சீகோன், ஓக் ஆகிய இருபெரும் அரசர்களை இஸ்ரவேலர்கள் வீழ்த்திவிட்டு முன்னேறி வந்திருக்கும் செய்திகள் அவனைக் கலங்கடித்திருந்தன. இதனால் மிகவும் பயந்தான். காரணம் இஸ்ரவேல் மக்கள் அனைவருக்கும் போர்புரியும் திறத்தை கடவுள் அளித்திருந்தார். அவர்களது எண்ணிக்கையும் அதிகரித்திருந்தது. இதனால் மோதுவதற்கு முன் இஸ்ரவேலர்களுக்கு வெற்றி கிடைக்காதவாறு அவர்களை சபிக்கச் செய்துவிடலாம் என்று தந்திரம் செய்தான்.

தனது நகரை ஒட்டியிருந்த பெத்தூர் என்ற ஊரில் வசித்துவந்த பிலேயாம் என்பவரை, இதற்கு சரியான நபர் எனக் கண்டறிந்தான் பாலாக். ஆம்.. பிலேயாத்தின் சாபத்தைப் பெற்றவர்கள் வாழ்ந்ததில்லை. அவனுக்கு அப்படியொரு நாக்கு. உடனே அவனுக்கு அவசரச் செய்தி அனுப்பினான் அரசன்.

“பிலேயாமே நீ வந்து எனக்கு உதவிசெய். எங்களைவிட இஸ்ரவேலர்கள் பலமிக்கவர்களாக உள்ளனர். உனக்குப் பெரும் வல்லமை உண்டு என்பதை அறிவேன். நீ ஒருவரை ஆசீர்வதித்தால் அவருக்கு நன்மைகள் ஏற்படும். நீ ஒருவருக்கு எதிராகப் பேசினால் அவருக்குத் தீமை ஏற்படும். எனவே நீ வந்து அவர்களை சபித்துவிடு. அதனால் நான் அவர்களை எளிதில் தோற்கடித்துவிடுவேன். இதற்கு உனக்குக் கைமாறாக என்ன வேண்டுமோ கேட்டுப் பெற்றுக்கொள்” என்று செய்தி அனுப்பினான்.

பாலாக், கைநிறைய அள்ளிக் கொடுப்பான் என்று நம்பிய பிலேயாம், தன் கழுதை மேலேறி அவனைக் காணக் கிளம்பினான். ஆனால் பிலேயாம் தன் மக்களைச் சபிப்பதற்கு கடவுள் விரும்பவில்லை. அதனால் பிலேயாமைப் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்த நீண்ட வாளுடன் கூடிய ஒரு தேவதூதனை அனுப்பினார். கண்களைக் கூசச்செய்யும் வாளுடன் தேவதூதன் கழுதையின் முன்பாகத் தோன்றினார். அந்தத் தேவதூதனை பிலேயாமால் பார்க்க முடியவில்லை. ஆனால் அவனுடைய கழுதையினால் அவரைப் பார்க்க முடிந்தது. கழுதை எவ்வளவோ முயன்றும் தேவதூதனைத் தாண்டி ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை. இதனால் கழுதை வழியிலேயே படுத்துவிடுகிறது. ஆத்திரம் தலைக்கேறிய பிலேயாம், தன் கோலால் கழுதையை மும்முறை அடித்துத் துவைத்தான். அப்போது கழுதை வாய் திறந்து பேசும்படியான அற்புதத்தை கடவுள் அரங்கேற்றினார்.

“என் எஜமானே.. என்ன தவறு செய்தேன் என்று என்னை இப்படி நையப் புடைக்கிறாய்?” என்று கழுதை கேட்டது. ‘கழுதை பேசுகிறதே’ என்று ஆச்சரியப்படுவதை விடுத்து “என் கையில் ஒரு வாள் மட்டும் இருந்திருந்தால் உன்னை இந்நேரம் கொன்று போட்டிருப்பேன்” என்று பிலேயாம் ஆத்திரம் பொங்கக் கத்துகிறான். அப்போது தேவதூதனை பிலேயாத்தின் கண்களுக்கும் தெரியும்படி செய்த கடவுள், “எதற்காக உன் கழுதையை அடித்தாய்? உன்னைத் தடுக்கவே நான் வந்தேன். இஸ்ரவேல் மக்களை சபிக்கச் செல்லாதே. உன் கழுதைதான் உன்னை கீழே இறக்கிவிடாமல் காப்பாற்றியது. அதுமட்டும் உன்னை விட்டு விலகியிருந்தால் நான் உன்னைக் கொன்று போட்டிருப்பேன்” என்று அந்த தேவதூதன் வழியாகப் பேசினார். அதைக் கேட்டு நடுங்கிய பிலேயாம், வந்த வழியே திரும்பி சென்றான். பாலாக்கின் சதித்திட்டம் வீணாகிப் போனது.
Tags:    

Similar News