பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளரை தேர்ந்தெடுக்க ஒரே நாளில் 8 லட்சம் பேர் ஆதரவு
அமிர்தசரஸ்:
பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 14-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பா.ஜனதா, ஆம் ஆத்மி, அகாலிதளம் கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
காங்கிரஸ் இன்னும் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கவில்லை. இந்தநிலையில் இம்முறை கடும் போட்டியை ஏற்படுத்தி உள்ள ஆம் ஆத்மி தங்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார்? என்பதை பொது மக்களே முடிவு செய்யலாம் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல் -மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார்.
தாங்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் யார்? என்பதை பொதுமக்கள் 70748 70748 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு வருகிற 17-ந் தேதி மாலை 5 மணி வரை தெரிவிக்கலாம் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த புதுமையான அறிவிப்புக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.
பொதுமக்கள் போட்டி போட்டிக்கொண்டு செல்போனில் தொடர்பு கொண்டும்,வாட்ஸ்-அப் மூலமும் கருத்துகளை பதிவு செய்தனர். இதனால் கடந்த 24 மணி நேரமும் இந்த செல்போன் எண் பரபரப்பாக இயங்கி வருகிறது.
ஒரேநாளில் 4 லட்சம் பேர் செல்போனில் தொடர்பு கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். 3 லட்சம் பேர் குறுப்பிட்ட எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலம் பதிவிட்டனர். 1 லட்சம் பேர் குறுந்தகவல் அனுப்பினார்கள்.தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.
17-ந்தேதிக்கு பிறகு யாருக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது என்பது தெரியவரும்.