விளையாட்டு
2-வது இன்னிங்சில் இந்தியா 276 ரன்னில் டிக்ளேர்: நியூசிலாந்துக்கு 540 ரன் வெற்றி இலக்கு
முதல் இன்னிங்சில் 263 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், 2-வது இன்னிங்சில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்துள்ளது.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 325 ரன்கள் குவித்தது. மயங்க் அகர்வால் அதிகபட்சமாக 150 ரன்கள் விளாசினார். நியூசிலாந்து அணி சார்பில் அஜாஸ் பட்டேல் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
பின்னர் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. இந்திய அணியின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 62 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. இந்திய அணியில் முகமது சிராஜ் 3 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும், அக்சார் பட்டேல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
263 ரன்கள் முன்னிலைப் பெற்ற போதிலும் இந்தியா பாலோ-ஆன் கொடுக்காமல் 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் சேர்த்திருந்தது. புஜாரா 29 ரன்களுடனும், மயங்க் அகர்வால் 38 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. மயங்க் அகர்வால் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 62 ரன்னில் வெளியேறினார். புஜாரா 47 ரன்களும், ஷுப்மான் கில் 47 ரன்களும், விராட் கோலி 36 ரன்களும் சேர்த்தனர்.
அக்சார் பட்டேல் ஆட்டமிழக்காமல் 26 பந்தில் 41 ரன்கள விளாச, இந்தயா 7 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் எடுத்திருந்தபோது 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
இதனால் இந்தியா மொத்தமாக 539 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. நியூசிலாந்து 540 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களம் இறங்கியுள்ளது. 2-வது இன்னிங்சில் நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேல் 4 விக்கெட்டும், ரவீந்திரா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.