செய்திகள்
ஆர்ப்பாட்டம்

பணியிடங்களில் ஹெல்த் பாஸ் கட்டாயம் என்பதா? -இத்தாலியில் வலுக்கும் போராட்டம்

Published On 2021-10-10 05:24 GMT   |   Update On 2021-10-10 05:24 GMT
எச்சரிக்கையை மீறி பாராளுமன்றம் நோக்கி பேரணி சென்றவர்கள் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சியடித்தும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் விரட்டியடித்தனர்.
ரோம்:

இத்தாலியின் ரோம் நகரில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பணியிடங்களில் கொரோனா ஹெல்த் பாஸ் என்ற திட்டம் (சுகாதார அட்டை) அமலில் உள்ளது. தற்போது மருத்துவ பணியாளர்களுக்கு மட்டும் இது கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக, கொரோனா தடுப்பூசி சான்றிதழ், கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டதற்கான ஆதாரம் அல்லது சமீபத்திய கொரோனா பரிசோதனை முடிவை வழங்க வேண்டும். 

கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதை உறுதி செய்யும் என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

தற்போது இந்த ஹெல்த் பாஸ் திட்டம் அக்டோபர் 15ம் தேதி முதல் அனைத்து பணியிடங்களிலும் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெல்த் பாஸ் இல்லாத தொழிலாளர்கள் சம்பளம் இல்லாமல் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுளள்து. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குறிப்பாக தீவிர வலதுசாரி குழுவினர் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

அனைத்து பணியிடங்களிலும் ஹெல்த் பாஸ் கட்டாயம் என்பதை ஏற்க முடியாது எனக் கூறி நேற்று ரோம் நகரில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சில இடங்களில் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

போலீசாரின் அறிவுறுத்தல் மற்றும் எச்சரிக்கையை மீறி ஒரு குழுவினர் பாராளுமன்றம் நோக்கி பேரணி சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.  எனினும் போராட்டக்காரர்கள் பின்வாங்கவில்லை. எனவே, அவர்கள் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சியடித்தும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் மிலன், செசினா உள்ளிட்ட பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Tags:    

Similar News