செய்திகள்
பல்லடத்தில் கடையின் மேற்கூரையை உடைத்து செல்போன் திருட்டு
பல்லடத்தில் இரவு நேரத்தில் கடையின் மேற்கூரையை உடைத்து செல்போன்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பல்லடம்:
பல்லடம் மாணிக்காபுரம் ரோட்டில் உள்ள கோபால் என்பவருக்கு சொந்தமான செல்போன் கடையில் நேற்று முன்தினம் இரவு மர்ம ஆசாமிகள் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கி கடையில் வைத்திருந்த ரூ.4ஆயிரம் மற்றும் 7 செல்போன்களை திருடிச் சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ.20 ஆயிரம் என்று கூறப்படுகிறது.
இதேபோல் செல்போன் கடை அருகில் உள்ள ரேஷன் கடையில் வெளிப்புற கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் பணப்பெட்டியின் டிராவை திறந்து அதில் பணம் இல்லாததால் ஆத்திரமடைந்து டிராவின் பெட்டிகளை அருகில் உள்ள மயானத்தில் கொண்டு போய் தூக்கி வீசிச்சென்றனர்.
கடந்த 3 வருடங்களுக்கு முன் இதே செல்போன் கடையில், தீபாவளியன்று திருட்டு சம்பவம் நடைபெற்றது. தற்போது அதேபோல தீபாவளிக்கு பின் திருட்டு நடைபெற்றுள்ளது என்று கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர். செல்போன் கடையில் திருட்டு சம்பவம் தகவலறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.