ஆன்மிகம்
ஆவணி மூலத்திருவிழாவில் கருங்குருவிக்கு உபதேசித்த லீலை அலங்காரத்தில் சுந்தரேசுவரர்-மீனாட்சி அம்மன்.

மூலத்திருவிழா: கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை அலங்காரத்தில் மீனாட்சி-சுந்தரேசுவரர்

Published On 2021-08-12 06:14 GMT   |   Update On 2021-08-12 06:14 GMT
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு பெற்ற ஆவணி மூலத்திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 20-ந்தேதி தேதி வரை நடக்கிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, தை, மாசி மாத திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.

சித்திரை திருவிழாவில் அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்து, 4 மாதங்கள் அம்மன் ஆட்சி புரிவதாக ஐதீகம். ஆவணி மூலத்திருவிழாவில் சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடத்தப்பட்டு, அவர் 8 மாதங்கள் ஆட்சி புரிவார். இத்தகைய சிறப்பு பெற்ற ஆவணி மூலத்திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 20-ந்தேதி தேதி வரை நடக்கிறது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த திருவிழாக்கள் கோவிலுக்குள் நடந்து வருகின்றன. ஆவணி மூல திருவிழாவில் முக்கியமானதாக கருதப்படும் 'திருவிளையாடல் லீலைகள்' நேற்று தொடங்கின. முதலாவதாக கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை நடந்தது. இது குறித்த புராண வரலாறு வருமாறு:-

ஒருவன் முற்பிறவியில் எவ்வளவோ புண்ணிய காரியங்கள் செய்திருந்தாலும் சிறிது பாவமும் செய்தமையால், அவன் மறுபிறப்பில் கருங்குருவியாக பிறந்தான். அந்த கருங்குருவியை காகங்கள் மிகவும் துன்புறுத்தின. அவற்றிற்கு பயந்து கருங்குருவி நெடுந்தூரம் பறந்து சென்று, ஒரு மரத்தின் கிளையில் அமர்ந்து தன்னுடைய நிலையை எண்ணி மிகவும் வருந்தியது.

அச்சமயம் அந்த மரத்தின் கீழே நின்று கொண்டிருந்த சிலர் மதுரையை பற்றியும், பொற்றாமரைக்குளத்திலே நீராடி சோமசுந்தரரை வணங்கினால் எண்ணியது நடக்கும் என்றும் பேசிக்கொண்டிருந்தனர். அதை கேட்ட கருங்குருவி நேராக மதுரைக்கு பறந்து பொற்றாமரைக்குளத்திலேயே நீராடி இறைவனை வணங்கியது.

அதை கண்ட இறைவன் கருங்குருவியின் பக்திக்கு மனம் இறங்கி மிருத்யுஞ்சய மந்திரத்தை உபதேசித்தார். மேலும் இறைவன் கருங்குருவியின் இனத்துக்கான எளியான் என்னும் பெயரை மாற்றி வலியான் என வழங்கினார் என்பது ஐதீகமாக சொல்லப்படுகிறது.

இந்த திருவிளையாடல் லீலையை எடுத்துரைக்கும் வகையில் கருங்குருவிக்கு உபதேசம் அளிக்கும் அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர், மீனாட்சியம்மன் எழுந்தருளினர். இந்த திருக்காட்சியை காண கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

நேற்று இரவு 7 மணிக்கு சுவாமி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்மன் வெள்ளி சிம்மவாகனத்திலும் எழுந்தருளி ஆடி வீதியில் வலம் வந்தனர். கொரோனா காலகட்டம் இல்லாமல் இருந்தால் சுவாமி-அம்மன் ஆவணி மூலவீதி, கீழபட்டமார் தெருவழியாக வடக்கு, கிழக்கு சித்திரை வீதி வழியே பவனி வந்திருப்பார்கள். 2-ம் நாள் நிகழ்ச்சியாக இன்று (வியாழக்கிழமை) நாரைக்கு முக்தி அளிக்கும் லீலை நடைபெறுகிறது.
Tags:    

Similar News