செய்திகள்
கோப்புப்படம்

ஆப்கானிஸ்தானில் போலீஸ் சோதனை சாவடியில் துப்பாக்கிச்சூடு - 12 போலீசார் பலி

Published On 2020-11-17 22:07 GMT   |   Update On 2020-11-17 22:07 GMT
ஆப்கானிஸ்தானில் போலீஸ் சோதனை சாவடியில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் தலைமை போலீஸ் அதிகாரி ஒருவர் உள்பட 12 போலீசார் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
காபூல்:

ஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கத்தார் தலைநகர் தோகாவில் அமைதி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இதுவரை ஏற்படாத நிலையில் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.

இந்த நிலையில் அந்த நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள படாக்ஸ்கான் மாகாணம் ஜூர்ம் மாவட்டத்தில் உள்ள போலீஸ் சோதனைச்சாவடி மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்து இறங்கிய பயங்கரவாதிகள் போலீஸ் சோதனைச்சாவடியை சுற்றி வளைத்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

என்ன நடக்கிறது என போலீசார் சுதாரிப்பதற்குள் பயங்கரவாதிகள் இந்த கொடூர தாக்குதலை நிகழ்த்தி விட்டு தப்பிச்சென்றனர்.

இதில் மாவட்ட தலைமை போலீஸ் அதிகாரி ஒருவர் உள்பட 12 போலீசார் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அதேசமயம் தலீபான் பயங்கரவாதிகளே இந்த தாக்குதலை நடத்தியதாக ஆப்கானிஸ்தான் அரசு குற்றம் சாட்டியுள்ளது.
Tags:    

Similar News