தினசரி பாதிப்பு சற்று உயர்வு- நாடு முழுவதும் புதிதாக 2.68 லட்சம் பேருக்கு கொரோனா
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 2.68 லட்சமாக உயர்ந்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,68,833 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 68 லட்சத்து 50 ஆயிரத்து 962 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று முன்தினம் பாதிப்பு 2.64 லட்சமாக இருந்த நிலையில், நேற்று பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது.
நேற்று அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 43,211 பேருக்கு தொற்று உறுதியானது. அங்கு நேற்று முன்தினம் பாதிப்பு 46,406 ஆக இருந்த நிலையில் புதிய பாதிப்பு சற்று குறைந்துள்ளது. இதற்கு தலைநகர் மும்பையில் புதிய பாதிப்பு நேற்று முன்தினத்தைவிட சுமார் 17 சதவீதம் குறைந்தது ஒரு காரணம் ஆகும்.
இதேபோல டெல்லியில் தினசரி பாதிப்பு 28,867-ல் இருந்து 24,383 ஆக சரிந்துள்ளது.
ஆனால் கர்நாடகாவில் புதிய பாதிப்பு 25,005-ல் இருந்து 28,723 ஆகவும், தமிழ்நாட்டில் பாதிப்பு 20,911-ல் இருந்து 23,459 ஆகவும் உயர்ந்துள்ளது. கேரளாவில் 16,338, உத்தரபிரதேசத்தில் 15,975 பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.
ஒடிசா, ராஜஸ்தான், குஜராத்தில் தினசரி பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்துள்ளது.
கொரோனா பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட மரணங்களையும் சேர்த்து 199 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 402 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,85,752 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்புடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 1,22,684 பேர் முழுமையாக நலம் பெற்று வீடு திரும்பி உள்ளனர்.
இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 49 லட்சத்து 47 ஆயிரத்து 390 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி 14,17,820 ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த எண்ணிக்கை நேற்று முன்தினத்தைவிட 1,45,747 அதிகம் ஆகும்.
நாடு முழுவதும் நேற்று ஒரேநாளில் 58,02,976 டோஸ் தடுப்பூசிகளும், மொத்தம் 156 கோடி டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி, இதுவரை 70.07 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் 16,13,740 மாதிரிகள் அடங்கும்.
இதையும் படியுங்கள்... ராஜஸ்தான் சிறுமி பலாத்கார வழக்கு- ஆதாரங்கள் கிடைக்கவில்லை என போலீஸ் தகவல்