செய்திகள்
அம்மா உணவகம்

சென்னையில் அம்மா உணவகங்களில் சப்பாத்தி விற்பனை நிறுத்தம்

Published On 2021-10-19 05:35 GMT   |   Update On 2021-10-19 06:41 GMT
நிதி நெருக்கடியால் அம்மா உணவகங்கள் தத்தளித்து வரும் நிலையில் இரவு நேரத்தில் வழங்கப்பட்ட சப்பாத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை:

சென்னை மாநகராட்சி சார்பில் 407 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. வார்டுக்கு 2 வீதம் 200 வார்டுகளில் மொத்தம் 400 உணவகங்களும், 7 அரசு மருத்துவமனைகளிலும் அம்மா உணவகங்கள் செயல்படுகிறது.

ஒரு ரூபாய்க்கு இட்லி, 5 ரூபாய்க்கு கலவை சாதங்கள், இரவில் 3 ரூபாய்க்கு சப்பாத்தி போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன.

3 வேளையும் குறைந்த விலையில் உணவுகள் கிடைப்பதால் ஏழை, எளிய, கூலித்தொழிலாளர்கள் சாலையோரம் வசிப்பவர்கள் இதனை நம்பி உள்ளனர்.

கொரோனா ஊரடங்கின் போது அம்மா உணவகம் அட்சய பாத்திரமாக விளங்கியது. இந்த நிலையில் அம்மா உணவகங்களில் படிப்படியாக கூட்டம் குறைந்தது.

குறைந்த அளவிலேயே உணவு தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அம்மா உணவகத்தால் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

ஆனாலும் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பணியாற்றக்கூடிய பெண்களுக்கு தினமும் 300 ரூபாய் வீதம் மாதம் 9 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது.

நிதி நெருக்கடியால் அம்மா உணவகங்கள் தத்தளித்து வரும் நிலையில் இரவு நேரத்தில் வழங்கப்பட்ட சப்பாத்தி நிறுத்தப்பட்டுள்ளது.


அதற்கு பதிலாக தக்காளி சாதம் வழங்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக சப்பாத்திக்கு தேவைப்படும் கோதுமை வினியோகம் செய்யாததால், நிறுத்தப்பட்டு இருப்பதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் தற்போது இரவு நேரங்களில் தக்காளி சாதம் மட்டுமே வழங்கப்படுகிறது. வழக்கம்போல காலையில் இட்லி, மதியம் சாம்பார், தயிர், எலுமிச்சை சாதங்கள் வழங்கப்படுகின்றன என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.


Tags:    

Similar News