செய்திகள்
உள்ளூர் ஆசிரியைக்கு பணி வழங்க வேண்டும்: பள்ளிக்கூடம் முன்பு கிராம மக்கள் போராட்டம்
சாத்தான்குளம் அருகே உள்ளூர் ஆசிரியைக்கு பணி வழங்க என வலியுறுத்தி பள்ளிக்கூடம் முன்பு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே உள்ள நொச்சிக்குளத்தில் ஒரு தனியார் பள்ளியில் அதே ஊரைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் பணியாற்றி வருகிறார். அந்த பணியிடத்தில் திசையன்விளையைச் சேர்ந்த மற்றொரு ஆசிரியைக்கு பணி ஆணை வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.இதற்கு அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் திசையன்விளையைச் சேர்ந்த ஆசிரியை, தனக்கு முறையான பணி நியமன ஆணை உள்ளது என கூறி நேற்று பள்ளியில் சேர வந்தார். அதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, உள்ளூர் சேர்ந்த ஆசிரியைக்கே பணியிடம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரை பணியில் சேருவதற்கு கையெழுத்திடுவதை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம் தாசில்தார் செல்வகுமார், இன்ஸ்பெக்டர் பெர்னார்டு சேவியர் உள்ளிட்ட அதிகாரிகள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பணியில் சேர வந்த ஆசிரியையிடம் முறையான பணி ஆணை கொண்டு வந்து சேருமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.