செய்திகள்
எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் (கோப்பு படம்)

பூஞ்ச் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல்: பொதுமக்கள் 2 பேர் காயம்

Published On 2019-10-22 10:53 GMT   |   Update On 2019-10-22 10:53 GMT
காஷ்மீரின் பூஞ்ச் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 2 பேர் படுகாயமடைந்தனர்.
ஜம்மு:

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதியில் அவ்வப்போது துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் குண்டுகளை வீசியும் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த தாக்குதல்களில் இந்திய ராணுவத்தை சேர்ந்த வீரர்கள் உயிரிழப்பதுடன் எல்லையோர கிராமங்களில் வாழும் இந்திய மக்களும் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் சமீபத்தில் நடத்திய தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், பூஞ்ச் மாவட்டத்துக்குட்பட்ட பாலக்கோட் எல்லைக்கோட்டு பகுதியில் உள்ள இந்திய ராணுவத்தின் கண்காணிப்பு முகாம்கள் மீது பாகிஸ்தான் படையினர் இன்று பிற்பகல் சுமார் 1.20 மணியில் மோர்ட்டார் குண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும்  தாக்குதல் நடத்தினர்.



இந்த தாக்குதலில் இந்திய எல்லை பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து காயமடைந்த நபர்களை மீட்ட இந்திய ராணுவத்தினர் அவர்களை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தினர் உரிய பதிலடி கொடுத்துவருவதால் எல்லையில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது.
Tags:    

Similar News