செய்திகள்
கேரளாவில் கனமழை- இதுவரை 42 பேர் உயிரிழப்பு
கேரளாவில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் உறுதி அளித்தார்.
திருவனந்தபுரம்:
அரபிக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கேரளா முழுவதும் பலத்த மழை பெய்தது. மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 11 மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டும், நிலச்சரிவில் சிக்கியும் பலர் உயிரிழந்தனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெறுகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் அரசின் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கேரளாவில் அக்டோபர் 12ம் தேதி முதல் 20ம் தேதிவரை கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 42 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 6 பேர் காணாமல் போயிருப்பதாகவும் கூறினார்.
மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்காக 304 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டிருப்பதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.
பத்ம விருதுகன் போன்று மாநில விருதுகளை அறிமுகம் செய்ய கேரள அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஒரு நபருக்கு கேரள ஜோதி விருது, 2 நபர்களுக்கு கேரள பிரபா விருது, 5 பேருக்கு கேரள ஸ்ரீ விருது வழங்கப்படும் என்றும் பினராயி விஜயன் அறிவித்தார்.