செய்திகள்
காயல்பட்டினத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்- கட்டிட காண்டிராக்டர் பலி
காயல்பட்டினத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கட்டிட காண்டிராக்டர் பலியானார். அவருடைய 2 வயது குழந்தை படுகாயம் அடைந்தது.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி சீனந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்ப பாண்டியன். இவருடைய மகன் நாராயணசெல்வம் (வயது 28). கட்டிட காண்டிராக்டர். இவருடைய மனைவி சுதா. இவர்களுடைய மகள் மகிஷா (2). நேற்று முன்தினம் நாராயண செல்வம் தன்னுடைய மகள் மகிஷாவுடன் காயல்பட்டினம் சேதுராஜா தெருவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் மாலையில் அங்கிருந்து நாராயணசெல்வம் தனது மகளுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.
காயல்பட்டினம் பஸ் நிலையம் அருகில் சென்றபோது, அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த நாராயண செல்வம், மகிஷா ஆகிய 2 பேருக்கும் காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனாலும் சிகிச்சை பலனின்றி இரவில் நாராயணசெல்வம் பரிதாபமாக உயிரிழந்தார். மகிஷாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.