செய்திகள்
பிரியங்கா காந்தி

ஆக்சிஜனுக்காக அழும் மக்கள், பொதுக்கூட்டங்களில் சிரிக்கும் தலைவர்கள்... பிரியங்கா காட்டம்

Published On 2021-04-21 06:40 GMT   |   Update On 2021-04-21 13:20 GMT
சிரிப்பு மற்றும் நகைச்சுவை அரங்கேறும் மேடையில் இருந்து பிரதமர் இறங்கி வந்து, மக்கள் முன் அமர்ந்து, அவர்களுடன் பேச வேண்டும் பிரியங்கா காந்தி கூறி உள்ளார்.
புதுடெல்லி:

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஆக்சிஜன் அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பிறகு ஏன் இங்கு பற்றாக்குறை இருக்கிறது? முதல் மற்றும் 2ம் அலை கொரோனாவுக்கு இடையே 8-9 மாதங்கள் இருந்தன, உங்களின் (மத்திய அரசு) சொந்த ஆய்வும் 2வது அலை உடனடியாக பரவும் என்று சுட்டிக்காட்டியது, ஆனால் நீங்கள் அதை புறக்கணித்தீர்கள்.

உங்களுக்கு நேரம் இருந்தது. இன்று, இந்தியாவில் 2000 லாரிகள் மூலமாக மட்டுமே ஆக்சிஜனைக் கொண்டு செல்ல முடியும். தேவைப்படும் இடங்களுக்கு ஆக்சிஜன் சென்று அடையவில்லை. கடந்த 6 மாதங்களில் 1.1 மில்லியன் ரெம்டெசிவிர் ஊசி மருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது. அதனால் இன்று நாம் பற்றாக்குறையை எதிர்கொள்கிறோம்.

ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை அரசு 6 கோடி தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்துள்ளது. இந்த நேரத்தில் 3-4 கோடி இந்தியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்தியர்களுக்கு ஏன் முன்னுரிமை அளிக்கவில்லை? மோசமான திட்டமிடல் காரணமாக தடுப்பூசி பற்றாக்குறை, திட்டமிடல் இல்லாததால் ரெம்டெசிவிர் மருந்து பற்றாக்குறை, சரியான வியூகம் இல்லாததால் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது. இது அரசாங்கத்தின் தோல்வி ஆகும்.



இன்றும் அவர்கள் (பாஜக தலைவர்கள்) பிரசாரத்தில் பிசியாக இருக்கிறார்கள். அவர்கள் மேடைகளில் இருந்து (பிரசார பொதுக்கூட்டங்களில்) சிரிக்கிறார்கள். மக்கள் அழுதுகொண்டிருக்கிறார்கள், உதவி வேண்டி கதறுகிறார்கள், ஆக்சிஜன், படுக்கைகள், மருந்துகள் தேவை என கேட்கிறார்கள். ஆனால், நீங்கள் பெரிய பொதுக்கூட்டங்களுக்கு செல்கிறீர்கள், சிரிக்கிறீர்கள்! உங்களால் மட்டும் எப்படி முடிகிறது?

சிரிப்பு மற்றும் நகைச்சுவை அரங்கேறும் மேடையில் இருந்து பிரதமர் இறங்கி வந்து, மக்கள் முன் அமர்ந்து, அவர்களுடன் பேச வேண்டும். மக்களின் உயிரை எப்படி காப்பாற்றப் போகிறார் என்று சொல்ல வேண்டும். 

இந்த அரசாங்கத்தால் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புடன் பேச முடிகிறது, எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பேச முடியாதா? எந்தவொரு எதிர்க்கட்சித் தலைவரும் ஆக்கப்பூர்வமான மற்றும் நேர்மறையான ஆலோசனைகளை வழங்கவில்லை என்று நான் நினைக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News