செய்திகள்
அந்த காரணத்திற்காக ஆம்புலன்சில் ஏற மறுத்த தம்பதி - வைரலாகும் தகவல்
கேரள மாநிலத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் தம்பதியினர் ஏற மறுத்ததாக கூறி ஸ்கிரீன்ஷாட் வைரலாகி வருகிறது.
கேரளா மாநிலத்தில் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த தம்பதியினர் ஆம்புலன்ஸ் சேவையை மறுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆம்புலன்சில் இந்து மத கடவுளான அனுமன் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்ததால் அவர்கள் ஆம்புலன்சில் ஏற மறுத்ததாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இதே சம்பவத்தின் செய்தி குறிப்பு ஸ்கிரீன்ஷாட் ஒன்றும் வைரல் பதிவுகளில் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஸ்கிரீன்ஷாட்டில் அனுமன் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஆம்புலன்ஸ், அருகில் கவச உடை அணிந்த சிலர் நிற்கின்றனர். இத்துடன் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த தம்பதி அனுமன் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஆம்புலன்சில் ஏற மறுத்தனர் எனும் தகவல் இடம்பெற்று இருக்கிறது.
வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், வைரலாகும் ஸ்கிரீன்ஷாட் போலியான ஒன்று என தெரியவந்தது. மேலும் அதில் இருந்த செய்தி நிறுவனம், இதுபோன்ற செய்தியை பதிவிடவில்லை என தெரிவித்து இருக்கிறது. இந்த சம்பவம் வேறு எந்த செய்தி நிறுவனமும் செய்தியாக வெளியிடவில்லை என இணைய தேடல்களில் தெரியவந்துள்ளது. அந்த வகையில் வைரலாகும் தகவலில் துளியும் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.