செய்திகள்
முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான வழக்கு - சென்னை காண்டிராக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே என் மீது பொய் வழக்கு போட்டு சோதனை நடத்தினார்கள் என முன்னாள் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.
சென்னை:
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர். அவர் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது கோவை மற்றும் சென்னை மாநகராட்சிகளில் ரூ.811 கோடி ஒப்பந்த பணிகளில் முறைகேடு நடந்ததாக வழக்கில் போலீசார் குற்றம் சாட்டி உள்ளனர்.
இதுதொடர்பாக வேலுமணியின் சென்னை மற்றும் கோவை வீடுகள் உள்ளிட்ட 60 இடங்களில் கடந்த வாரம் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் வழக்கிற்கு தேவையான முக்கியமான ஆவணங்கள் மற்றும் ரூ.2 கோடிக்கான வங்கி வைப்பு தொகை ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், சென்னை எம்.ஜி.ஆர்.நகர், வள்ளல் பாரி தெருவில் வசிக்கும் வெற்றிவேல் என்பவர் வீட்டில் நேற்று மாலை லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள்.
வெற்றிவேல் சென்னை மாநகராட்சி காண்டிராக்டராக உள்ளார். முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான வழக்கு தொடர்பாக கைப்பற்றப்பட்ட சில ஆவணங்கள் அடிப்படையில், வெற்றிவேல் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். இந்த சோதனை இரவிலும் நீடித்தது.