செய்திகள்
ஜெகதீப் தாங்கர்

மம்தா பானர்ஜி மீது கவர்னர் குற்றச்சாட்டு

Published On 2020-11-21 23:44 GMT   |   Update On 2020-11-21 23:44 GMT
மம்தா பானர்ஜி அரசை குற்றம்சாட்டும் கருத்துகளை கவர்னர் ஜெகதீப் தாங்கர் நேற்று டுவிட்டரில் தொடர்ச்சியாக வெளியிட்டார்.
கொல்கத்தா:

மேற்கு வங்காள கவர்னர் ஜெகதீப் தாங்கருக்கும், அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில், மம்தா பானர்ஜி அரசை குற்றம்சாட்டும் கருத்துகளை கவர்னர் ஜெகதீப் தாங்கர் நேற்று டுவிட்டரில் தொடர்ச்சியாக வெளியிட்டார்.

‘திரிணாமுல் காங்கிரஸ் அரசு, ஜனநாயக மதிப்பீடுகளை அழிக்கிறது’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘அதிகார வர்க்கத்தினர் சிலரால் என்னை நோக்கி கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை, நியாயப்படுத்த இயலாதவை. இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான மீறல்கள், நடவடிக்கைக்கு உரியவை. மாநிலத்தில் அரசியல்சாசன தலைவரான என்னை குறிவைத்து குற்றச்சாட்டுகள் கூறப்படுவது, இங்கு அதிகார வர்க்கமே அரசியல் சிறைக்கு உட்பட்டிருப்பதை காட்டுகிறது.

மம்தா அரசின் கீழ் போலீஸ் துறையின் அரசியல் மயமாக்கம், கோழைத்தனம், சரணாகதி துரதிர்ஷ்டவசமானது, ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. அரசியல் சாசனம், சட்டத்தின் மீதான இதுபோன்ற அத்துமீறல்களை மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் கவனிக்க வேண்டும். அவற்றை அலட்சியப்படுத்தவோ, மன்னிக்கவோ கூடாது’ என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்-மந்திரி மம்தாவுக்கு தான் எழுதியுள்ள கடிதத்தின் புகைப்படங்களையும் கவர்னர் ஜெகதீப் தாங்கர் வெளியிட்டுள்ளார்.
Tags:    

Similar News