செய்திகள்
உள்ளாட்சி தேர்தல்: வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா - 2 வாலிபர்கள் கைது
ராமநாதபுரம் அருகே ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின்கீழ் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சக்கரக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும்படை அலுவலரான ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் தங்கபாண்டியன் தலைமையிலான அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மஞ்சனமாரியம்மன் கோவில் அருகில் 2 பேர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்தனர்.
அவர்களை பிடித்து சோதனையிட்டபோது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ.300 மற்றும் பணம் கொடுப்பதற்காக எழுதி வைத்திருந்த வாக்காளர்கள் பெயர் எழுதிய துண்டு சீட்டையும் கண்டனர்.
இதுதொடர்பாக நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் ராமநாதபுரம் மஞ்சனமாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்த தியாகராஜன் (வயது25), சக்கரக்கோட்டை எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த முத்துப்பாண்டி (30) என்பது தெரிந்தது. இதனை தொடர்ந்து இருவரையும் பணம் மற்றும் துண்டுச்சீட்டுடன் கேணிக்கரை போலீசில் ஒப்படைத்தனர்.
இதுதொடர்பாக ஆணையாளர் தங்கபாண்டியன் அளித்த புகாரின் அடிப்படையில் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.