செய்திகள்
இலவச வீட்டுமனை கேட்டு கண்களில் கருப்புத்துணி கட்டி வந்த பொதுமக்கள்
இலவச வீட்டுமனை பட்டா வழங்குமாறு பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் கோரிக்கை நிறைவேறவில்லை.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர், கணபதிபாளையம் ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பல்லடம் தாலுகா அலுவலகத்திற்கு ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை தலைவர் பௌத்தன் தலைமையில் மனு கொடுக்க வந்தனர்.
அவர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
நாங்கள் அனைவரும் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். சொந்த வீடு, நிலம் இல்லை. மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள். இலவச வீட்டுமனை பட்டா வழங்குமாறு பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் கோரிக்கை நிறைவேறவில்லை.
எனவே எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர். மனுக்கொடுக்க வந்தவர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி வந்ததால் தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.