உள்ளூர் செய்திகள்
அழகர்கோவில்

மதுரை அழகர்கோவிலில் பக்தர்களின்றி நடக்கும் சொர்க்கவாசல் திறப்பு

Published On 2022-01-12 10:16 GMT   |   Update On 2022-01-12 10:16 GMT
மதுரை அழகர்கோவில் மற்றும் கூடலழகர் பெருமாள் கோவில்களில் நாளை வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது. பக்தர்கள் இல்லாமல் சொர்க்கவாசல் திறப்பு நடக்க உள்ளது.
அலங்காநல்லூர் 


மதுரை மாவட்டம் அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு  நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் கடந்த 3&ந் தேதி முதல் (பகல்பத்து, இராபத்து) உற்சவ திருவிழா தொடங்கி வருகிற 22-ந்தேதி வரை நடைபெறுகிறது. 

தினமும் கோவில் உள்பிரகாரத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சொர்க்கவாசல் திறப்பு விழா நாளை(13&ந்தேதி) அதிகாலை பக்தர்கள் இல்லாமல் நடக்கிறது. இதில் மேளதாளம் முழங்க வர்ணக்குடை, தீவட்டி பரிவாரங்களுடன் காலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் கள்ளழகர் என்கிற சுந்தரராஜ பெருமாள் செர்க்கவாசல் வழியாக வந்து அங்குள்ள சயன மண்டபத்தை சுற்றி வந்து அதே மண்டபத்தில் எழுந்தருளுகிறார்.   

கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லை. இக்கோவிலின் உப கோவிலான தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலிலும் காலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் பக்தர்களின்றி சொர்க்கவாசல் திறப்பு நடக்கிறது. அந்த நிகழ்வு முடிவுற்ற பின்னர் காலை 7 மணிக்கு மேல் வழக்கம்போல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மதுரை நகரில் அமைந்துள்ள 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான கூடலழகர் பெருமாள் கோவிலிலும் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கி சிறப்புடன் நடந்து வருகிறது. தினமும் காலை, மாலையில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.

அனைத்து வைணவ திருத்தலங்களிலும் சொர்க்கவாசல் திறப்பு காலையில் நடைபெறும். ஆனால் இக்கோவிலில் மட்டும் மாலையில் நடத்தப்படுவது சிறப்புமிக்கதாகும். அதன்படி வைகுண்ட ஏகாதசியான நாளை மாலை 3.45 மணிமுதல் 4 மணிக்குள் பெருமாள் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளுகிறார். 

சொர்க்கவாசல் திறப்பின் போது பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இந்த நிகழ்வு முடிந்த பின் மாலை 5 மணிக்கு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். காலையில் வழக்கம்போல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம்.

இதேபோல் திருமோகூர் காளமேக பெருமாள் கோவில், மதுரை தெற்கு கிருஷ்ணன் கோவில் தெருவில் உள்ள பிரசன்ன வேங்கடேச பெருமாள் கோவிலிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
Tags:    

Similar News