செய்திகள்
முக்கூடல் அருகே மகள்-மருமகன் சரமாரி வெட்டிக்கொலை: கூலி தொழிலாளி வெறிச்செயல்
முக்கூடல் அருகே மகள்-மருமகனை சரமாரி வெட்டிக்கொலை செய்த கூலி தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
முக்கூடல்:
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள சீதபற்பநல்லூரைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவருடைய மகன் சிறுத்தை என்ற செல்வம் (வயது 29). கூலி தொழிலாளி.
இவருடைய மனைவி உச்சிமாகாளி என்ற மஞ்சு (26). இவர்களுக்கு மணிகண்டன் (8), முகேஷ் (4), புவனேஷ் (3) ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.
செல்வம் சரியாக வேலைக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் கடந்த சில ஆண்டுகளாக தன்னுடைய மனைவி, குழந்தைகளுடன் மாமனாரின் ஊரான முக்கூடல் அருகே நந்தன்தட்டை கிராமத்தில் வசித்து வந்தார்.
அங்கு மாமனாரான கூலி தொழிலாளி புலேந்திரனின் (60) வீட்டிலேயே அனைவரும் கூட்டு குடும்பமாக வசித்தனர். செல்வம் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்ததை மாமனார் கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
நேற்று மாலையில் புலேந்திரன் வீட்டில் தன்னுடைய பேரக்குழந்தைகளை தூக்கி கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த செல்வம் மாமனாரிடம், ‘தனது குழந்தைகளை தொடக் கூடாது?’ என்று கூறினார்.
இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த புலேந்திரன் வீட்டில் கிடந்த அரிவாளை எடுத்து மருமகன் என்றும் பாராமல் செல்வத்தை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மஞ்சு ஓடிச் சென்று தந்தையை தடுத்து கணவரை காப்பாற்ற முயன்றார். இதில் மஞ்சுவின் மீதும் அரிவாள் வெட்டு விழுந்தது.
இதில் பலத்த காயம் அடைந்த செல்வம், மஞ்சு ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். உடனே அங்கிருந்து புலேந்திரன் தப்பி சென்று விட்டார்.
இந்த பயங்கர சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், இதுகுறித்து பாப்பாக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த செல்வம், மஞ்சு ஆகியோரின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான புலேந்திரனை வலைவீசி தேடி வருகின்றனர். குடும்ப தகராறில் தந்தையும், தாயும், தாத்தாவால் படுகொலை செய்யப்பட்டதால் 3 குழந்தைகளும் பரிதவித்தனர். தந்தையே தன்னுடைய மகள்-மருமகனை வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.