முத்துப்பேட்டை அருகே விபத்து- மீன் வியாபாரி பலி
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஆலங்காடு எல்லை அண்ணா சிலை அருகே முத்துப்பேட்டையிலிருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி சென்ற அரசு பஸ் எதிரே ஆலங்காட்டில் இருந்து முத்துப்பேட்டை நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலியானவரின் முகம் சிதைந்து காணப்பட்டதால் அவர் யார்? என்று கண்டறிவதில் நீண்டநேரம் ஆகியது.
இதனையடுத்து அங்கு ஏராளமான மக்கள் கூடினர், சாலை இருபுறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து தடைப்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த போலீசார் பலியானவரின் உடலை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பலியானவர் முத்துப்பேட்டை அடுத்த பேட்டை பழைய மாதா கோவில் தெருவை சேர்ந்த மீன் வியாபாரி ராமசாமி(48) என்பது தெரியவந்தது.