வல்லம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை- ஆர்.டி.ஓ. விசாரணை
வல்லம்:
தஞ்சையை அடுத்துள்ள வல்லம் தெற்கு காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (வயது 50). இவரது மகள் லோகேஷ்வரி (வயது 25). இவருக்கும் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள புது வயலை சேர்ந்த வீரமுத்து என்பவரின் மகன் கோவிந்தராஜ் (வயது 27) என்பவருக்கும் கந்தர்வக் கோட்டையில் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்தவுடன் புதுவயலில் உள்ள கோவிந்தராஜின் வீட்டிற்கு லோகேஷ்வரி சென்றுள்ளார். 4 மாதங்கள் மட்டும் புதுவயலில் தங்கி இருந்த லோகேஷ்வரி அதன் பிறகு வல்லத்தில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து கோவிந்தராஜ் வேலைக்காக சிங்கப்பூர் சென்றுள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று லோகேஷ்வரி வல்லம் தெற்கு காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள அவரது பெற்றோரின் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தற்கொலை செய்து கொண்ட லோகேஷ்வரியின் தந்தை பன்னீர் செல்வம் வல்லம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து வல்லம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.