உள்ளூர் செய்திகள்
கைது

ரவுடியை வெட்டி கொன்ற 4 பேர் கைது- முன் விரோதத்தில் தீர்த்து கட்டியதாக வாக்குமூலம்

Published On 2022-01-13 10:27 GMT   |   Update On 2022-01-13 10:27 GMT
நாகர்கோவில் அருகே ரவுடி கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
நாகர்கோவில்:

நாகர்கோவில் அருகே உள்ள குஞ்சன்விளை வைகுண்டர் வீதியை சேர்ந்தவர் தங்ககிருஷ்ணன் (வயது 43). இவர் மீது கொலை வழக்கு கொலை மிரட்டல் வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளது. குமரி மாவட்ட ரவுடிகள் பட்டியலில் இவரது பெயரும் இடம்பெற்றுள்ளது. தங்க கிருஷ்ணன் தற்போது சேலத்தில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் வழக்கு விசாரணைக்காக தங்ககிருஷ்ணன் ஊருக்கு வந்திருந்தார். கோர்ட்டில் ஆஜராகி விட்டு நேற்று முன்தினம் தங்க கிருஷ்ணன் வீட்டில் இருந்தார். அப்போது தங்க கிருஷ்ணனை அவரது நண்பர்கள் மது அருந்த அழைத்துச் சென்றனர். மது அருந்திகொண்டு இருந்தபோது அங்கு வந்த கூலிப்படையினர் தங்ககிருஷ்ணனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இது குறித்து சுசீந்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கன்னியாகுமரி டி.எஸ்.பி. ராஜா, இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். தங்ககிருஷ்ணனின் தந்தை சுந்தர மகாலிங்கம் சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கள்ளக்காதல் மற்றும் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருப்பது தெரிய வந்தது. போலீசார் கொலை வழக்கில் தொடர்புடைய நாகர்கோவில் வட்டவிளையை சேர்ந்த விஷ்ணு (26), வல்லன் குமரன் விளையைச் சேர்ந்த பிரவீன் (23), குஞ்சன்விளையை சேர்ந்த மணிகண்டபிரபு (27) கலைநகரை சேர்ந்த சுதன் (29) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 4 பேரிடம் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கைது செய்யப்பட்ட சுதனுக்கும் கொலை செய்யப்பட்ட தங்க கிருஷ்ணனுக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்தது தெரியவந்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுதனை தங்க கிருஷ்ணன் தாக்கிய விரோதத்தில் நண்பர்களுடன் சேர்ந்து சுதன், தங்ககிருஷ்ணனை தீர்த்துக் கட்டியதாக தெரிவித்துள்ளார்.

போலீசார் கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News