உள்ளூர் செய்திகள்
விழுப்புரத்தில் மின் ஊழியர் வீட்டில் நகை- பணம் கொள்ளை
விழுப்புரத்தில் மின் ஊழியர் வீட்டின் கதவை உடைத்து பணம், நகையை கொள்ளையடித்து சென்றது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விழுப்புரம்:
விழுப்புரம் சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 36). இவர் சிந்தாமணி மெயின் ரோட்டின் அருகில் வசித்து வருகிறார். இவர் முண்டியம்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 2 நாளுக்கு முன்பு வேல்முருகனின் தந்தை இறந்து போனார். எனவே அந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க சென்றார். துக்க நிகழ்ச்சி முடித்து விட்டு இன்று காலை வேல்முருகன் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த வேல்முருகன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 7 பவுன் நகை மற்றும் ரூ. 1,50,000 ரொக்கப் பணம் இல்லை. இதனை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து முருகன் விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். தடயவியல் நிபுணர்களும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.
மோப்பநாய் கொலை நடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்து 4 கிலோ மீட்டர் தூரம் சென்று மீண்டும் அதே இடத்திற்கு வந்தது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.