துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த தொழிலாளி மாயம்
விளாத்திகுளம்:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கம்பத்துபட்டி கிராமத்தை சேர்ந்தவர் வீரசின்னு (வயது 36).
இவரது மனைவி பாக்கியம் (32). இவர்களுக்கு வினித் (10), வினிதா (9) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
பாக்கியம் நேற்று புதூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் வீரசின்னு கடந்த 2 வருடத்திற்கு முன்பு துபாய்க்கு கட்டிட வேலைக்கு சென்றிருந்தார். கடந்த 20-ந் தேதி அவர் ஊருக்கு வருவதாக என்னிடம் செல்போனில் பேசினார்.
அதன்படி 20-ந் தேதி இரவு 7.30 மணிக்கு சார்ஜா விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார்.
விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் புறப்பட்டு விட்டதாகவும் கூறினார். ஆனால் இரவு 11.20 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வர வேண்டிய அவர் ஊர் வந்து சேரவில்லை. அவரது செல்போன் ‘சுவிட்ச்-ஆப்’ ஆக உள்ளது.
அவர் சென்னை வந்திறங்கினாரா? வந்திருந்தால் அவர் எங்கு சென்று விட்டார்? என்று தெரியவில்லை. 2 நாட்களாகியும் அவர் ஊர் திரும்பவில்லை. அவரது உயிருக்கு எதுவும் ஆபத்து ஏற்பட்டிருக்குமோ? என கவலையாக உள்ளது. எனவே என் கனவரை கண்டுபிடித்து தரவேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.