உள்ளூர் செய்திகள்
பாஜகவினர் போராட்டம்

கருத்து சுதந்திரம் மறுப்பு: திமுக அரசைக் கண்டித்து வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்திய பாஜக

Published On 2021-12-12 13:25 GMT   |   Update On 2021-12-12 13:25 GMT
தமிழக பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீது ஆளும் திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்வதாக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல்குமார் குற்றம்சாட்டினார்.
சென்னை:

தமிழகத்தில் திமுக அரசு கருத்து சுதந்திரம் மற்றும் எழுத்துரிமையை பறிப்பதாக பாஜக குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், கருத்து சுதந்திரம் மற்றும் எழுத்துரிமையை மறுக்கும் காவல்துறையை கண்டித்து பாஜகவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு சார்பில், வாயில் கருப்பு துணி கட்டி மவுன அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்ற போராட்டத்தில், பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.



அதன்பின் பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

தமிழக பாஜகவை சேர்ந்த தொண்டர்கள் 18க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதை உடனடியாக திரும்ப பெற வேண்டும். தமிழக காவல்துறை ஏவல்துறையாக செயல்பட்டு வருகிறது. தமிழக பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீது ஆளும் திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கையாக, கைது செய்யப்படுகிறார்கள்.

இப்போது நடைபெற்றது முதல்கட்ட போராட்டம் மட்டுமே. தமிழக அரசும், தமிழக காவல்துறையும் இதுபோல் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளை தொடரும் பட்சத்தில், பாஜகவுக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பவர்கள் மற்றும் வலதுசாரி சிந்தனையில் வலைப்பதிவு செய்பவர்களையும் தொடர்ந்து, பழிவாங்கும் நோக்கில் கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டால் எங்கள் மாநிலத் தலைவரின் ஆலோசனையோடு அடுத்த கட்ட போராட்டம் மிகத்தீவிரமாக மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர்  பேசினார்.

இதேபோல் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்தின் பாஜக அலுவலகத்திலும் சமூக ஊடகப் பிரிவின் சார்பில், அனைவரும் வாயில் கருப்புத் துணி கட்டி மவுன அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News