செய்திகள்
ஜி.கே.வாசன்

விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீடு வழங்க வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

Published On 2021-10-12 03:40 GMT   |   Update On 2021-10-12 03:40 GMT
பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்த அனைத்து பரிவர்த்தனை சொத்துக்களை இணையதள பதிவின்படி, முறைப்படி, கால தாமதமின்றி பட்டா மாற்றம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

2020-2021-ம் ஆண்டு பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும். கடந்த ஆண்டு சம்பா பருவ சாகுபடியின்போது நிவர், புரெவி ஆகிய புயல்களால் கனமழை, காற்று ஆகியவற்றால் விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கி விவசாயம் பாதிக்கப்பட்டது.

ஆனால் கடந்த வருடம் புயல் பாதித்த பகுதி வாழ் விவசாயிகள் அனைவருக்கும் காப்பீடு திட்டப்படி இழப்பீட்டுத்தொகை இன்னும் வழங்கப்படாததாலும், பயிர் கடன் சரிவர கிடைக்காததாலும் விவசாயிகள் தற்போதைய சாகுபடிப் பணிகளில் ஈடுபட முடியாமல் சிரமப்படுகின்றனர்.

மேலும் தமிழக அரசின் பயிர் காப்பீடு திட்டத்தில் இணைவதற்கு நவம்பர் மாதம் 15-ந்தேதி இறுதி நாள் என அறிவிப்பு வெளியான நிலையில் விவசாயிகள் பயிர் கடன் பெறாமல் சாகுபடி பணிகளை துவக்குவது மிகவும் கடினமானது.

பத்திரப்பதிவு துறையில் சொத்துக்கள் பதிவு செய்தால் பட்டா மாற்றம் செய்யும் பணிக்கு சொத்துக்களை வாங்கியவர் அது சம்பந்தமாக அலுவலகத்திற்கு பல முறை சென்று, பணம் செலவழித்து, நீண்ட முயற்சிக்கு பிறகே பட்டா மாறுதல் செய்ய முடிகிறது.

இம்முறையில் உள்ள கால விரயம், பண விரயம் ஆகியவற்றை தவிர்க்கும் விதமாக பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்த அனைத்து பரிவர்த்தனை சொத்துக்களை இணையதள பதிவின்படி, முறைப்படி, கால தாமதமின்றி பட்டா மாற்றம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிலுவையில் உள்ள மத்திய காலகடனை விவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். காரணம் இப்போது விவசாயிகள் பயிர் கடன் பெற முயற்சி செய்கின்ற வேளையில் கடன் பெறமுடியாமல் சிரமப்படுகின்றனர்.

இச்சூழலில் தமிழக அரசு மத்திய கால கடன் பெற்ற விவசாயிகளின் நலன் காக்க வேண்டும் என்று நினைத்தால் அக்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News