செய்திகள்
நிழல் உலக தாதா சோட்டா ராஜன் கொரோனா பாதிப்பால் மரணம்
நிழலுலக தாதா சோட்டா ராஜனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து கடந்த மாதம் 26ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
புதுடெல்லி:
மும்பை நிழலுலக தாதா சோட்டா ராஜன் (வயது 61) மீது கொலை, பணம் பறிப்பு உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தலைமறைவாக இருந்த சோட்டா ராஜன் இந்தோனேசியாவின் பாலியில் இருந்து கடந்த 2015ல் நாடு கடத்தப்பட்டான். இந்தியா கொண்டு வந்ததும் உடனடியாக கைது செய்யப்பட்ட சோட்டா ராஜன் திகார் சிறையில் அடைக்கப்பட்டான்.
பத்திரிகையாளர் ஜோதிர்மோய் டே கொலை வழக்கில் நிழலுலக தாதா சோட்டா ராஜனுக்கு கடந்த 2018ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் சோட்டா ராஜனுக்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் 26ம்தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஏற்கனவே இதய நோய், நீரிழிவு மற்றும் சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்தான். கொரோனா பாதிப்பும் சேர்ந்ததால், அவனது உடல்நிலை மோசமடைந்தது. அவனது உயிரைக் காப்பாற்ற டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்துவந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி சோட்டா ராஜன் இன்று உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.