செய்திகள்
ஷான் மார்ஷ்-ஐ தாக்கும் பந்து

பேட்ஸ்மேன்களின் ஹெல்மெட்டை பதம் பார்த்த மெல்போர்ன் பிட்ச்: போட்டியை ரத்து செய்தனர் நடுவர்கள்

Published On 2019-12-08 14:31 GMT   |   Update On 2019-12-08 14:31 GMT
ஷான் மார்ஷ் மற்றும் ஸ்டாய்னிஸ் ஆகியோரின் ஹெல்மெட்டை பவுன்சர் பந்து கடுமையாக தாக்கியதால் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் முதல்-தர கிரிக்கெட் தொடர் ஷெஃப்பீல்டு ஷீல்டு. இந்தத் தொடரில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா - விக்டோரியா இடையிலான கிரிக்கெட் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

நான்கு நாட்கள் கொண்ட இந்த போட்டியில் விக்டோரியா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா முதலில் களம் இறங்கியது.

டிராப்-இன் ஆடுகளத்தில்  (drop-in wicket) எதிர்பாராத விதமாக பவுன்சர் அதிக அளவில் இருந்தது. பனிப்பொழிவின் தாக்கத்தால் பந்து வெடிப்பான இடத்தில் பிட்ச் ஆகும்போது எதிர்பாரத விதமாக பவுன்சர் ஆகியது.

இதனால் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் பந்தை எதிர்கொள்ள பயந்தனர். விக்டோரியாவின் வேகப்பந்து வீச்சாளர் பீட்டர் சிடில் வீசிய பந்து ஷான் மார்ஷ் மற்றும் ஸ்டாய்னிஸ் ஆகியோரின் ஹெல்மேட்டை பதம் பார்த்தது.

இருவருக்கும் மூளையளர்ச்சி (concussion) பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால் இருவரும் தெளிவாக உள்ளனர் எனத் தெரியவந்தது. ஆனால் முதல் நாளில் வீரர்கள் விளையாட மறுத்ததால் முதல்நாள் ஆட்டம் 39.4 ஓவருடன் முடிவடைந்தது.

அதன்பின் பராமரிப்பாளர்கள் பந்து பவுன்ஸ் ஆகாத வகையில் ஆடுகளத்தை சரிசெய்ய முயற்சி மேற்கொண்டனர். இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன் நடுவர்கள் ஆடுகளத்தை ஆராய்ந்தனர்.



அப்போது ஆடுகளம் விளையாடுவதற்கு உகந்ததாக இல்லை என போட்டியை ரத்து செய்தனர். சில ஆண்டுகளாகவே மெல்போர்ன் ஆடுகளம் தனது தனித்தன்மையை இழந்து வருகிறது.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது ஐசிசி தரத்திற்கு ஏற்றவாறு ஆடுகளம் இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News