களியக்காவிளை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
நாகர்கோவில்:
களியக்காவிளையை அடுத்த நரியன்விளை பகுதியைச் சேர்ந்தவர் சேவியர்(வயது40). இவர் சம்பவத்தன்று காலையில் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் குழித்துறைக்கு சென்று கொண்டிருந்தார்.
இடைக்குளம் அருகே வரும் போது அவர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையின் பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சேவியரை மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து களியக்காவிளை போலீசில் புகார் செய்யப்பட்டது.
இன்ஸ்பெக்டர் சொர்ணலதா மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.