செய்திகள்
ஸ்ரேயாஷ் அய்யர் - வார்னர்

முதல் முறையாக இறுதிப்போட்டியில் நுழைய டெல்லி அணி ஆர்வம் - ஐதராபாத்துடன் இன்று மோதல்

Published On 2020-11-08 06:50 GMT   |   Update On 2020-11-08 06:50 GMT
குவாலிபையர் 2 ஆட்டத்தில் ஸ்ரேயாஷ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன.
அபுதாபி:

13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டதை நெருங்கி உள்ளது. நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 6-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இறுதிப் போட்டிக்கு நுழையும் 2-வது அணி எது என்பது இன்று இரவு தெரியும். அபுதாபியில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் குவாலிபையர் 2 ஆட்டத்தில் ஸ்ரேயாஷ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ்- வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

வெற்றிபெறும் அணி வருகிற 10-ந் தேதி துபாயில் நடைபெறும் இறுதிப் போட்டியில் மும்பையுடன் மோதும்.

டெல்லி அணி இதுவரை இறுதிப்போட்டிக்கு நுழைந்தது இல்லை. அந்த அணி முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.

டெல்லி அணி குவாலிபையர் 1 ஆட்டத்தில் மும்பை இந்தியன்சிடம் மிகவும் மோசமாக தோற்றது. அந்த அணியின் பேட்டிங்கும் பந்துவீச்சும் எடுபடவில்லை. இதை இன்றைய ஆட்டத்தில் சரிசெய்வது அவசியம் ஆகும். 

இந்த போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டேனியல் சாம்சுக்கு பதிலாக ஹெட்மயர் இடம் பெறுவார். தொடக்க வீரர் பிரித்விஷாவின் பேட்டிங் மோசமாக இருக்கிறது. இதனால் அவர் கழற்றிவிடப்படலாம். 
டாசை பொறுத்து ஹர்ஷல் படேல் அல்லது துஷ்கர் தேஸ்பாண்டே இருக்கும். தொடக்க வீரர்களாக தவானும், ஸ்டோனிசும் களம் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த போட்டி தொடரில் டெல்லி அணி 2 முறை ஐதராபாத்திடம் தோற்றது. கடந்த 27-ந் தேதி துபாயில் நடந்த ஆட்டத்தில் 88 ரன் வித்தியாசத்திலும், செப்டம்பர் 29-ந் தேதி அபுதாபியில் நடந்த ஆட்டத்தில் 15 ரன் வித்தயாசத்திலும் தோற்றது.
 
இதற்கு டெல்லி அணி இன்று பதிலடி கொடுத்து இறுதிப்போட்டிக்கு நுழையுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஷ், ஸ்டோனிஸ், தவான், ரிஷப்பண்ட், ரபடா, நோர்டியா, அக்சர் படேல் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். 

ஐதராபாத் அணி தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் வென்று குவாலிபையர் 2 போட்டிக்கு முன்னேறி உள்ளது. அந்த அணி டெல்லியை வீழ்த்தி 3-வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழையும் வேட்கையில் உள்ளது. 

ஐதராபாத் அணியின் பலமே பந்து வீச்சுதான். வேகப்பந்தில் தமிழக வீரர் டி.நடராஜன், சந்தீப் சர்மா, சுழற்பந்தில் ரஷீத்கான், சபாஷ் நதீம் ஆகியோர் முத்திரை பதித்து வருகிறார்கள். 

கேப்டன் வார்னர், வில்லியம்சன், மனிஷ் பாண்டே ஆகியோர் பேட்டிங்கில் சாதித்து வருகிறார்கள். ஜேசன் ஹோல்டர் ஆல்ரவுண்டர் வரிசையில் அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறார். 
Tags:    

Similar News