செய்திகள்
கேரளாவில் இடைவிடாமல் பெய்யும் கனமழை- இதுவரை 5 பேர் உயிரிழப்பு
மாநில அரசின் வேண்டுகோளை அடுத்து, ராணுவம் மற்றும் விமானப்படையினர் மீட்பு பணிக்காக களமிறங்கி உள்ளனர்.
திருவனந்தபுரம்:
குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாமல் பலத்த மழை பெய்து வருகிறது. கோழிக்கோடு, பாலக்காடு, மலப்புரம், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மலையோர கிராமங்களில் பலத்த மழை பெய்து வருவதால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. முக்கிய அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து உள்ளது. அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். பலரை காணவில்லை.
பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் ஆகிய 5 மாவட்டங்களில் மிக மோசமான வானிலையுடன் கனமழை முதல் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாநில அரசின் வேண்டுகோளை அடுத்து, ராணுவம் மற்றும் விமானப்படையினர் மீட்பு பணிக்காக களமிறங்கி உள்ளனர். ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் உள்ளன. தெற்கு ஏர் கமாண்டின் கீழ் உள்ள அனைத்து விமான தளங்களும் தயார் நிலையில் உள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிக்காக ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். பாங்கோடு ராணுவ முகாமில் இருந்து சுமார் 30 வீரர்கள் அடங்கிய குழு காஞ்சிரப்பள்ளிக்கு விரைந்துள்ளனர்.