செய்திகள்
முத்துச்சாமி- காளியப்பன்

ஊத்துக்குளி அருகே தந்தை-மகன் விஷமாத்திரை தின்று தற்கொலை

Published On 2021-04-30 19:45 GMT   |   Update On 2021-04-30 19:45 GMT
ஊத்துக்குளி அருகே மதுகுடிக்கும் பழக்கத்தை கைவிடும்படி குடும்பத்தினர் கூறியதால் தந்தை-மகன் விஷ மாத்திரை தின்று தற்கொலை செய்துகொண்டனர்.
ஊத்துக்குளி:

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள காளிபாளையம் பெரியதோட்டம் பகுதியை சேர்ந்தவர் முத்துச்சாமி (வயது 80). இவருடைய மகன் காளியப்பன் என்ற குணசேகர் (51). இவருடைய மனைவி சகுந்தலா (45). இவர்களுக்கு கவுதம் (23), தீபக் (21) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

சகுந்தலாவின் பெற்றோர் இறந்து விட்டதால் அவருக்கு சொந்தமான எஸ்.பெரியபாளையம் ஊராட்சி கோழிக்காரன் தோட்டம் பகுதியில் உள்ள வீட்டில் காளியப்பன் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். முத்துச்சாமி மற்றும் காளியப்பன் இருவரும் சேர்ந்து அப்பகுதியில் சிறிய அளவில் பனியன் நிறுவனம் நடத்தி வந்தனர். மதுப்பிரியர்களான இருவரும் தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் இருவரும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளனர். இதனை சகுந்தலா மற்றும் அவருடைய மகன்கள் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த முத்துச்சாமி மற்றும் அவரது மகன் காளியப்பன் இருவரும் இரவில் யாருக்கும் தெரியாதவாறு விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.

அதன்படி விஷமாத்திரையை தின்றதால் இருவரும் மயக்கமடைந்து கீழே விழுந்தனர். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த சகுந்தலா அவர்கள் இருவரையும் அருகில் இருப்பவர்கள் உதவியுடன் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் மது குடிக்க வேண்டாம் என்று குடும்பத்தினர் கண்டித்ததால் தந்தை, மகன் விஷ மாத்திரை தின்று தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News