உள்ளூர் செய்திகள்
உத்தமசோழபுரம் கோவிலில் நாளை தேரோட்டம்
உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் நாளை சித்ரா பவுர்ணமி தேரோட்டம் நடக்கிறது.
ஆட்டையாம்பட்டி
சேலம் அருகே கொண்டலாம்பட்டி அடுத்துள்ள உத்தமசோழபுரத்தில் பிரசித்த பெற்ற கரபுரநாதர் சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நாளை (சனிக்கிழமை) சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற உள்ளது. இதற்கான கொடியேற்று விழா நேற்று நடந்தது.
தமிழ் புத்தாண்டு, பிரதோஷ விழா, குரு பெயர்ச்சி நாள், கொடியேற்று விழா ஆகிய 4 நிகழ்ச்சிகள் நேற்று ஒரே நாளில் நடந்தன. இதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் சிவன், பார்வதி சோமஸ்கந்தர் சாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
பின்னர் காலை 11 மணிக்கு தேர் கலசம் வைத்தல், மாலையில் யாகசாலை பூஜையை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் பிச்சாண்டவர் உற்சவம், மாலை 6 மணிக்கு திருக்கல்யாணம், அன்னதானம் வழங்கப்பட உள்ளது. நாளை (சனிக்கிழமை) காலையில் சாமிகளுக்கு அபிஷேகம், மதியம் 12 மணிக்கு பவுர்ணமி பூஜை, மாலை 4 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி, தேரோட்டம் நடைபெற உள்ளது.
இதையடுத்து கோவில் மற்றும் விழாக் குழுவினர் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை நடராஜர் தரிசனம், வசந்த உற்சவம், கொடி இறங்குதல், பாலிகை விடுதலும், மாலை 6 மணிக்கு கால பைரவர் பூஜை, இரவு 7 மணிக்கு சத்தாபரணம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.