ஆன்மிகம்
தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய சின்னக்குமாரருக்கு தீபாராதனை நடந்த காட்சி.

பழனி முருகன் கோவிலில் பங்குனி மாத கார்த்திகை உற்சவ விழா

Published On 2021-03-19 03:57 GMT   |   Update On 2021-03-19 03:57 GMT
பழனி முருகன் கோவிலில் பங்குனி மாத கார்த்திகை உற்சவ விழாவில் விஸ்வரூப தரிசனம் நடந்தது. பின்னர் தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளி உட்பிரகாரத்தில் வலம் வந்தார்.
பழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் கார்த்திகை உற்சவ விழா நடைபெற்று வருகிறது. அதன்படி பங்குனி மாத கார்த்திகை உற்சவ விழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடந்தது. பின்னர் 4.30 மணிக்கு நடந்த விளாபூஜையில் முருகப்பெருமானுக்கு சன்னியாசி அலங்காரமும், 8 மணிக்கு சிறுகாலசந்தி பூஜையில் வேடர் அலங்காரமும் செய்யப்பட்டது. 9 மணிக்கு காலசந்தி பூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரத்திலும், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையில் வைதீகர் அலங்காரத்திலும் முருகப்பெருமான் அருள்பாலித்தார். பின்னர் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

கோவிலுக்கு அதிகாலை முதலே பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதனால் அனைத்து தரிசன வழிகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மாலை 6.40 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளி உட்பிரகாரத்தில் வலம் வந்தார்.

இதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு சின்னக்குமாரர் தங்கரதத்தில் எழுந்தருளினார். அதையடுத்து தங்கரத புறப்பாடு நடந்தது. இதில் 112 பக்தர்கள் தலா ரூ.2 ஆயிரம் செலுத்தி தங்கரதம் இழுத்து வழிபட்டனர். பின்னர் 9 மணிக்கு ராக்கால பூஜையில் முருகப்பெருமானுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

இதேபோல் நத்தம் அருகே திருமலைக்கேணியில் உள்ள சுப்பிரமணியசாமி கோவிலில் பங்குனி மாத கார்த்திகை பூஜை நடந்தது. இதில் நத்தம் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

மேலும் அருகில் உள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.
Tags:    

Similar News