கடன் தகராறில் சினிமா தியேட்டர் ஊழியரை தாக்கி பணம் பறிப்பு
புதுச்சேரி:
திருபுவனைபாளையம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 44). இவர், மூலகுளத்தில் உள்ள சினிமா தியேட்டரில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இதற்கிடையே இந்த சினிமா தியேட்டரை லீசுக்கு எடுத்து நடத்தும் அன்பழகன் என்பவர் நூர்முகமது என்பவரிடம் ரூ.2 லட்சம் கடன் வாங்கி இருந்தார்.
ஆனால், அந்த பணத்தை அன்பழகன் திருப்பி கொடுக்கவில்லை. வட்டியும் செலுத்தவில்லை. பல முறை நூர்முகமது பணத்தை திருப்பி கேட்டும் அன்பழகன் பணத்தை கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார்.
இந்த நிலையில் பணத்தை திருப்பி கொடுக்காததால் ஆத்திரம் அடைந்த நூர் முகமது தனது தம்பி ஷாஜகான் உள்பட 5 பேருடன் சினிமா தியேட்டருக்கு வந்தார். அங்கு அன்பழகன் இல்லாததால் ஆவேசம் அடைந்த அவர்கள் அங்கிருந்த தியேட்டர் ஊழியர் அசோக்குமாரை தாக்கினர்.
மேலும் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த டிக்கெட் விற்பனை பணம் ரூ.7 ஆயிரத்தை பறித்தனர். அதோடு அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்து சூறையாடிவிட்டு சென்று விட்டனர்.
இதுகுறித்து அசோக்குமார் ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நூர்முகமது உள்பட 5 பேரையும் தேடி வருகிறார்கள்.