உள்ளூர் செய்திகள்
புழல் ஜெயில்

புழல் ஜெயிலில் 8 பெண்கள் உள்பட 9 கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு

Published On 2022-01-15 08:22 GMT   |   Update On 2022-01-15 08:22 GMT
புழல் ஜெயிலில் 8 பெண்கள் உள்பட 9 கைதிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
செங்குன்றம்:

தமிழகத்தில் உள்ள சிறைகளில் சுமார் 15 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 70 சதவீதம் பேர் விசாரணை கைதிகள். மீதமுள்ள 30 சதவீதம் பேர் தண்டனை கைதிகள் சிறைகளில் உள்ள கைதிகளுக்கு கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால் தமிழக சிறைத்துறை மேலும் பல முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இந்த நிலையில் சென்னை புழல் சிறையில் விசாரணை கைதிகள் அடைக்கப்படும் பகுதியில் இருந்த ஒரு கைதிக்கு கடந்த 9-ந் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதேபோல் பெண்கள் சிறப்பு சிறையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண் கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் 8 பெண் கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதில் மிகவும் பாதிக்கப்பட்ட 3 கைதிகள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மற்ற கைதிகள் சிறையில் உள்ள தனிமைப்படுத்தல் பகுதியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Tags:    

Similar News