செய்திகள்
இதனால் நாட்டிற்கு ஆகப்போவதென்ன? -மத்திய மந்திரிசபை விரிவாக்கத்தை விமர்சித்த கமல்
உள்கட்சித் தலைவர்கள், வேறு கட்சிகளிலிருந்து இணைந்தவர்கள், வரவிருக்கிற மாநில தேர்தல்கள் ஆகியவற்றை மனதில் வைத்து மந்திரிசபை விரிவாக்கம் நடந்திருப்பதாக கமல் ஹாசன் கூறி உள்ளார்.
சென்னை:
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், 43 பேர் மந்திரிகளாக பதவியேற்றனர். தமிழகத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் எல்.முருகன் மத்திய மந்திரியாக பதவியேற்றுள்ளார். மத்திய மந்திரி பதவி கிடைத்ததை தமிழக பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்.
ஆனால், தமிழகத்திற்கு ஒரு மத்திய அமைச்சர் கிடைத்திருக்கிறார் என்று மகிழ முடியாதபடி அமைச்சரவை விரிவாக்கம் இருப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் கூறி உள்ளார்.
“நாடு அனைத்துத் துறைகளிலும் பின்னடைந்திருக்கிறது. இந்தச் சரிவிலிருந்து மீளும் நோக்கத்தில் அமைச்சரவை மாற்றம் நடந்திருக்கவேண்டும். ஆனால், உள்கட்சித் தலைவர்கள், வேறு கட்சிகளிலிருந்து இணைந்தவர்கள், வரவிருக்கிற மாநில தேர்தல்கள் ஆகியவற்றை மனதில் வைத்து நடந்திருக்கும் இந்த விரிவாக்கம் பாஜகவிற்கு வேண்டுமானால் நன்மை பயக்கலாம். நாட்டிற்கு இதனால் ஆகப்போவதென்ன?” என கமல் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதையும் படியுங்கள்... இது மற்றவர்களுக்கு ஒரு பாடம்... மத்திய மந்திரிகள் ராஜினாமா குறித்து ப.சிதம்பரம் கருத்து