செய்திகள்
மூதாட்டி ஒருவர் கருவாடு காயவைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதை காணலாம்

நாகையில் கருவாடு தயாரிக்கும் பணி மும்முரம்

Published On 2020-10-16 09:47 GMT   |   Update On 2020-10-16 09:47 GMT
கொரோனாவில் முடங்கிய கருவாடு தயாரிக்கும் பணி நாகையில் தொடங்கியது. மழைகாலங்களில் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:

நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் கருவாடு காயவைக்கும் தளங்கள் உள்ளன. இங்கு 100-க்கும் மேற்பட்டவர்கள் கருவாடு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நெத்திலி, வாளை, கிழங்காமீன், ஓட்டாம்பாறை, பூக்கெண்டை, திருக்கை, சேதமடைந்த வஞ்சிரம் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களில் கருவாடு தயாரிக்கின்றனர். இங்கு தயாரிக்கப்படும் கருவாடு திருவாரூர், தஞ்சை, திருச்சி, மயிலாடுதுறை, சேலம், வேலூர் மற்றும் ஆந்திரா மாநிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

அக்கரைப்பேட்டை கருவாடு காயவைக்கும் தளத்தில் நாள் ஒன்றுக்கு 500 கிலோ முதல் 1 டன் வரையிலான அளவிற்கு கருவாடு தயாரிக்கப்படுகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடிக்கு கருவாடு வர்த்தகம் நடைபெறும்.

இதுதவிர கோழித்தீவனத்துக்காக பாறை, சிறிய வகை சங்கரா, வாவல்பொடி, நண்டுப்பொடிகள் உள்ளிட்ட வலையில் சிக்கி, சேதமடைந்த மீன்களிலும் கருவாடு தயாரிக்கப்படுகிறது. ஒரு மூட்டை கோழித்தீவன கருவாடு ரூ.25-ல் இருந்து ரூ.40 வரை வெளியூர்களில் இருந்து வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். நாள் ஒன்றுக்கு 1000 மூட்டை கோழி தீவனத்துக்கான கருவாடுகள் இங்கு தயார் செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

கொரோனா முழு ஊரடங்கு காலத்தில் முற்றிலும் முடங்கிப்போன கருவாடு தயாரிக்கும் தொழிலானது, தற்போது மீண்டும் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கருவாடு உற்பத்தியில் கேரள மாநிலம் தலச்சேரிக்கு அடுத்த நிலையில் இருப்பது நாகை மாவட்டம். இங்கு தயார் செய்யப்படும் கருவாடுகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது. அடைமழை காலங்களில், அன்றாட உணவு தேவையில் முக்கியத்துவம் பெற்றிருந்த மாவத்தல், கொத்தவரை வத்தல், சுண்டைக்காய் வத்தல், பாகற்காய் வத்தல் மற்றும் வடகம் வரிசையில் அசைவப்பிரியர்களின் முக்கிய உணவாக கருவாடு இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகையில் சூறைக்காற்றுடன் கன மழை பெய்தபோது, இந்த கருவாடு உற்பத்தி பாதிக்கப்பட்டாலும், தற்போது வெளுத்து வாங்கும் வெயிலில் சிறப்பாக தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

மழைகாலங்களில் கருவாடு உற்பத்தி முற்றிலும் பாதிக்கும். அப்போது சேமித்து வைத்த கருவாடுகள் விற்பனை செய்யப்படும். அந்த நாட்களில் கருவாட்டின் விலையும் வழக்கத்தை விட சற்று அதிகமாக இருக்கும். மேலும் புயல் காலங்கள் என்றால், கொட்டகைகள் இடிந்து, அதில் உள்ள கருவாடுகள் அனைத்தும் வீணாகும். எனவே வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் மழை காலங்களில் சேதமடையும் கருவாட்டிற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News