முக்கிய விரதங்கள்
வீட்டில் வழிபாடு

செவ்வாய் விரதம் அனுஷ்டிக்கும் முறைகள்

Published On 2022-02-15 01:23 GMT   |   Update On 2022-02-15 01:23 GMT
செவ்வாய் கிழமைகளில் வீட்டின் வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்துவிளக்கேற்றி ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் மற்றும் பல அம்மன் பாடல்களை பாடுவது மிகவும் நல்லது.
நவக்கிரகங்களில் செவ்வாயோடு நேரடி சம்பந்தம் உடையவன் முருகன். எனவே செவ்வாய்க்கிழமை விரதம் முருகனுக்கு மிகவும் உகந்ததாகிறது. அதிலும் ஆடிச் செவ்வாய் கிழமைகள் மிக மிக உயர்ந்தது. வீட்டில் இந்த விரதமிருக்கலாம் என்றாலும் வீட்டை விட செவ்வாய் சம்பந்தம் உடைய முருகன் தலங்களுக்குச் சென்று அங்கு இரவு தங்கி 1 நாள் விரதம் இருந்து அத்தலத்தில் உள்ள முருகன் சன்னதியில் அபிஷேக ஆராதனைகள் செய்து திருமுருகனை பூஜித்தால் பலன்கள் அதிகம்.

செவ்வாய்க்கிழமை சூரியன் உதிக்கும் முன்பு எழுந்து, நீராடி விநாயகரை நினைத்து துதிசெய்து வணங்க வேண்டும். பின்பு ஸ்ரீ பஞ்சாட்ச மந்திரத்தை 108 முறை ஜெபித்து சிவத்தியானம் செய்தல் வேண்டும். அதன் பிறகு சூரியனைப் பார்த்து ஓம் சிவசூரியாய நம என்று கூறி நமஸ்காரம் செய்ய வேண்டும்.

அதைத்தொடர்ந்து பரமசிவன், பார்வதி, முருகனை மனத்துக்குள் வணங்கி 108 அல்லது 1008 முறை ஜெபம் செய்து 100 கிராம் மிளகினை ஒரு புதுத்துணியில் முடிந்து ஓம் வைத்தியலிங்கார்ப்பணம் என்று கூறி ஓரிடத்தில் அதை வைத்து சிவனடியார் ஒருவரை வீட்டிற்கழைத்து, உபசரித்தல் நல்லது.

அமுது படைத்து தாம்பூலம் தட்சனை கொடுத்து பின்பு சுத்தமாக பச்சரிசி, பாசிப்பருப்பு, நெய், மிளகு, சீரகம் சேர்த்த உப்பில்லாப் பொங்கல் பொங்கி சுவாமிக்கு நிவேதனம் செய்து அப்பிரசாதத்தை அரை வயிறு மட்டும் உண்டு. அன்று மாலை சிவாலய தரிசனம் செய்து சிவத்தியானத்துடன் திரும்பி வந்து சிவபுராணம் அல்லது கந்தபுராணம் படிக்கக் கேட்டு பின்பு ஏதும் உண்ணாமலே இரவு பாய் தலையணை இன்றி வெறும் தரையில் கம்பளம் விரித்துப்படுத்துறங்க வேண்டும்.
இதுவே செவ்வாய் விரதம் அனுஷ்டிக்கும் முறையாகும். நவக்கிரகங்கள் எனும் ஓன்பது கோள்களில் ஒன்று அங்காரகன் எனும் செவ்வாய் கிரகம்.

அரத்தன், அழல், அழலோன், அறிவன், ஆரல், உதிரன், குருதி, குஜன், சேய், செந்தீவண்ணன், மங்களன், வக்கிரன், எனப் பற்பல பெயர்கள் செவ்வாய்க்கு உண்டு. இந்த செவ்வாய்க்கும் ஸ்ரீமுருகப்பெருமானுக்கும் மிக நெருங்கிய தொடர்புகள் உண்டு. செவ்வாய்க்கும் முருகனுக்கும் மட்டுமல்ல, செவ்வாய்க்கும் பூமிக்கும் கூட தொடர்புகள் உண்டு. செவ்வாய்க்கும் பூமிக்கும், பூமிக்கும் முருகனுக்கும், செவ்வாய்க்கும் முருகனுக்கும் தொடர்புள்ளதால்தான் பூமியில் நாம் செவ்வாயின் அம்சமாக முருகனை வழிபடுகிறோம். இந்த காரணத்தால்தான் செவ்வாய்க்கிழமை முருகனை வழிபடவும், விரதமிருக்கவும் ஏற்றதொரு புனித நாளாக இருக்கிறது.

ஆடி செவ்வாய் கிழமைகளில் வீட்டின் வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்துவிளக்கேற்றி ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் மற்றும் பல அம்மன் பாடல்களை பாடுவது மிகவும் நல்லது. பால் பாயாசம், சர்க்கரை பொங்கல் போன்றவற்றை நிவே தனம் செய்வார்கள். பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவளித்து, அவர்களுக்கு ரவிக்கை, தாம்பூலம், வளையல், குங்குமச் சிமிழ், சீப்பு, கண்ணாடி, மருதாணி, மஞ்சள் போன்றவற்றை கொடுத்து சிறப்பிக்க தேவியின் அருள் கிடைக்கும். ஆடி செவ்வாயன்று தலை குளித்து அம்மனை வழிபட திருமாங்கல்ய பாக்கியம் கிடைக்கும்.

இதுதவிர ஆடி செவ்வாயில் மேற்கொள்ளும் நோன்பு குறிப்பிடத்தக்கது. இந்த நோன்பை கடைபிடிப்பதால் விரைவில் திருமணம் நடக்கும். மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும்.
Tags:    

Similar News