செய்திகள்
ஆய்வுக்கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சஜ்ஜன்சிங் சு.சவான் பேசிய போது எடுத்த படம்.

வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - வாக்குச்சாவடி முகவர்களுக்கு அதிகாரி வேண்டுகோள்

Published On 2021-01-10 06:39 GMT   |   Update On 2021-01-10 06:39 GMT
சிறப்பு சுருக்க திருத்த பணிகள் குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று வாக்குச்சாவடி முகவர்களுக்கு வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சஜ்ஜன்சிங் சு.சவான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடலூர்:

இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை தலைமை தேர்தல் அலுவலர் ஆகியோரது ஆணையின்படி கடலூர் மாவட்டத்தில் 2021-ம் ஆண்டிற்கான சிறப்பு சுருக்க முறை திருத்த பணியினை கண்காணித்திட சஜ்ஜன்சிங் சு.சவான், வாக்காளர் பட்டியல் பார்வையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவர், கடந்த மாதம் 18-ந் தேதி மற்றும் கடந்த 5-ந் தேதி கடலூர் மாவட்டத்திற்கு வருகை வந்து வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்த பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

அதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் தொடர்பான 3-வது கட்ட ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் அருண் சத்யா, சிதம்பரம் சப்-கலெக்டர் மதுபாலன், கடலூர் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சஜ்ஜன்சிங் சு.சவான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், வருகிற 20-ந் தேதி தேர்தல் ஆணையத்தால் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. பட்டியல் வெளியிட்ட பின்னரும் வாக்காளர்கள், இணைய வழியாகவும், நேரிடையாகவும் விண்ணப்பித்து தங்கள் பெயர்களை சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்த பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளலாம்.

மேலும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளை சார்ந்த வாக்குச்சாவடி முகவர்களும், தங்கள் பகுதியை சேர்ந்த வாக்காளர்களுக்கு சிறப்பு சுருக்க திருத்த பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு விடுபட்ட வாக்காளர்களின் விவரத்தினை தெரிவித்து சுருக்க திருத்த பணிகளை மேற்கொள்ள உதவிட வேண்டும் என்றார்.

இதில் தாசில்தார் பலராமன், தே.மு.தி.க. மாவட்ட துணை செயலாளர் லெனின், பா.ஜ.க. மாவட்ட துணை தலைவர்கள் செல்வகணபதி, விக்னேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயசங்கர், பகுஜன் சமாஜ் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் சுரேஷ், காங்கிரஸ் கட்சி குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாதவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி குளோப் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News