லைஃப்ஸ்டைல்
குழந்தைகள் காய்கறிகளை சாப்பிட அடம் பிடிக்கும். அவர்களுக்கு இவ்வாறு காய்கறிகள் சேர்த்து தோசை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்
வரகரிசி, இட்லி அரிசி - தலா அரை கிலோ
உளுந்து - 100 கிராம்
வெந்தயம் - ஒன்றரை டேபிள் ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
காய்கறி மசாலா செய்யத் தேவையானவை
துருவிய கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ், டர்னிப் - தலா 2 டேபிள் ஸ்பூன்
துருவிய உருளைக் கிழங்கு - 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
பொடியாக நறுக்கிய குடைமிளகாய் - 1
சீரகம் - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
வரகரிசி, இட்லி அரிசி, வெந்தயம், உளுந்து ஆகியவற்றை மூன்று மணி நேரம் ஊறவையுங்கள். ஊறியதும் மையாக அரைத்துக்கொள்ளுங்கள். போதுமான உப்பைச் சேர்த்து மாவை நன்கு கரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த மாவைப் புளிக்கவையுங்கள்.
வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் சீரகம், பொடியாக நறுக்கிய பூண்டு, பெரிய வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள்.
அதனுடன் துருவிய கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், டர்னிப், தேங்காய்த் துருவல் ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள்.
கூடவே மஞ்சள் தூள், போதுமான உப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள்.
வதக்கிய பொருட்களைப் புளித்த மாவுடன் சேர்த்துக் கலக்குங்கள்.
தோசைக் கல்லைச் சூடாக்கி தயாராக வைத்துள்ள மாவை ஊற்றிச் சுற்றிலும் எண்ணெய்விட்டுத் திருப்பிப்போட்டு வேகவைத்து எடுங்கள்.
தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னியுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.