செய்திகள்
ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 பேர் கைது
ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு் வருண்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் சிறப்பு தனிப்படை பிரிவை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையில் போலீசார் பொன்னேரி சக்தி நகரில் உள்ள ரேஷன் கடைக்கு விரைந்து சென்றனர். அப்போது மினி வேன் ஒன்றில் 3 டன் ரேஷன் அரிசி ஏற்றப்பட்டு ஆந்திராவுக்கு கடத்த இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மினி வேனில் இருந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர் பொன்னேரி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ஓய்வுபெற்ற ரேஷன் கடை ஊழியர் வேல்சுந்தரபாண்டியன் (வயது 63) என்பதும் ஆரணியை சேர்ந்த முனுசாமி (24) என்பதும், இந்த கடையில் இருந்து ரேஷன் அரிசியை ஆந்திராவுக்கு கடத்துவதும் தெரியவந்தது. மேலும் அவர்களிடம் இருந்து ரூ.74 ஆயிரம், 2 மினி வேன்களை கைப்பற்றினர்.