செய்திகள்
ராணிமேரி கல்லூரியில் தீவிர போலீஸ் பாதுகாப்பு

75 இடங்களில் ஓட்டு எண்ணிக்கை- மின்னணு எந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு

Published On 2021-04-07 05:24 GMT   |   Update On 2021-04-07 09:17 GMT
75 வாக்கு எண்ணும் மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை தினமும் கண்காணிப்பதற்காக கட்டுப்பாட்டு அறைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை:

தமிழக சட்டசபை தேர்தல் நேற்று அமைதியான முறையில் நடந்து முடிந்தது.

88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புடன் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. 72.78 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இது 2 சதவீதம் குறைவாகும்.

வழக்கமாக தேர்தல்களில் மாலை 5 மணியுடன் ஓட்டுப்பதிவு முடிவடைந்து விடும். ஆனால் இந்த முறை கொரோனா பரவல் காரணமாக இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்குப்பதிவு முடிவடைந்ததும் மொத்த வாக்குகள், பதிவான வாக்குகள் கணக்கிடப்பட்டன. அந்த பணி முடிந்ததும் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டன. பின்னர் பலத்த பாதுகாப்பு டன் தேர்தல் ஆணையத்தின் வாகனத்தில் ஏற்றி ஓட்டு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

234 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் 75 மையங்களில் அடுத்த (மே) மாதம் 2-ந்தேதி எண்ணப்படுகிறது. இன்றிலிருந்து 24 நாட்கள் வரை வாக்கு எண்ணிக்கைக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

ஓட்டு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ள மின்னணு எந்திரங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கட்சி முகவர்களும் ஓட்டு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொகுதி வாரியாக மின்னணு எந்திரங்கள் பிரிக்கப்பட்டு ஓட்டு எண்ணும் மையங்களில் தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.

“ஸ்ட்ராங் ரூம்” என்று அழைக்கப்படும் மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் முன்பு துணை ராணுவ படையினர் துப்பாக்கிகளுடன் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.



இவர்களுக்கு அடுத்து தமிழ்நாடு சிறப்பு போலீசார் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் பணியில் உள்ளனர். ஓட்டு எண்ணும் மையங்களின் நுழைவு வாயில்களில் மூன்றாவது வளையமாக தமிழக காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் இருக்கும் அறைக்கு அருகில் யாரும் செல்ல முடியாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. துணைநிலை ராணுவம், சிறப்பு போலீஸ் படை, உள்ளூர் போலீசார் என 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

75 வாக்கு எண்ணும் மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை தினமும் கண்காணிப்பதற்காக கட்டுப்பாட்டு அறைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த அறைகளில் இருந்து 24 மணி நேரமும் வாக்கு எண்ணும் மையங்களை அதிகாரிகள் கண்காணிக்க முடிவு செய்துள்ளனர்.

மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு அருகில் போலீசாரும் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் மின்னணு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் யாரும் நெருங்காதபடி பாதுகாப்புடன் இருப்பது உறுதி செய்யப்படும்.

வாக்கு எண்ணும் மையங்களில் அனைத்து கட்சிகளைச் சேர்ந்த முகவர்கள் தங்கு வதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அவர்களுக்கு தனித்தனி அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

இது போன்ற அடையாள அட்டைகள் இல்லாத கட்சியினர் யாரையும் எந்த காரணத்தை கொண்டும் அனுமதிக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வாக்கு எண்ணப்பட உள்ள 75 மையங்களும் அடுத்த 24 நாட்களுக்கு பரபரப்புடன் காணப்படும்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொண்டு நேற்று ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது. வாக்காளர்கள் அனைவருக்கும் கையுறைகள் வழங்கப்பட்டன. அதன் பிறகே அவர்கள் ஓட்டுப்போட அனுமதிக்கப்பட்டனர். ஓட்டு எண்ணிக்கையின் போதும் இதுபோன்று கொரோனா தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆயிரம் ஓட்டுக்கு அதிகமாக இருந்த வாக்குச்சாவடிகள் இரண்டாக பிரிக்கப்பட்டதை போல கூடுதல் வாக்குகள் எண்ணப்படும் வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பணியாளர்களை நியமித்து சமூக இடைவெளியை கடைபிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக உதவி தேர்தல் அதிகாரிகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக 3 அல்லது 4 இடங்களில் தனித்தனியாக ஓட்டுக்களை எண்ணவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஓட்டு எண்ணிக்கையின்போது முகவர்கள் மொத்தமாக கூடுவதை தவிர்க்க கட்டுப்பாட்டு அறையில் அகன்ற திரையில் தேர்தல் முடிவுகளை ஒளிபரப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள அறைகளில் 14 மேஜைகள் எப்போதும் அமைக்கப்பட்டு இருக்கும். ஆனால் தற்போது கூடுதலாக 2 மேஜைகளை அமைத்து 16 மேஜைகளுடன் ஓட்டு எண்ணும் பணியை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கைக்கு முன்பும், ஓட்டு எண்ணிக்கை முடிந்த பின்பும் நோய் தொற்று பரவல் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதால் கண்டிப்பாக இதை கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

Similar News