செய்திகள்
விசாரணைக்கு ஆஜரான ஆஷிஷ் மிஸ்ரா

லக்கிம்பூர் வன்முறை- ஆஷிஷ் மிஸ்ரா ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

Published On 2021-11-03 10:54 GMT   |   Update On 2021-11-03 10:54 GMT
விவசாயிகள் கொல்லப்பட்டது தொடர்பாக மத்திய மந்திரி அஜய் மிஷ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா, ஆஷிஷ் பாண்டே லவகுஷா ராணா உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லக்கிம்பூர் கேரி:

உத்தர  பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்த மாதம் 3ம் தேதி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பாஜகவினர் சென்ற கார் மோதியதாலும், அதன்பின்னர் நடந்த வன்முறையாலும் மொத்தம் 8 பேர் கொல்லப்பட்டனர். விவசாயிகள் மீது காரை ஏற்றிய சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

விவசாயிகள் கொல்லப்பட்டது தொடர்பாக மத்திய மந்திரி அஜய் மிஷ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா, ஆஷிஷ் பாண்டே லவகுஷா ராணா உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் ஆஷிஷ் மிஸ்ரா உள்ளிட்ட 3 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணை லக்கிம்பூர் கேரி மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணைக்கு பிறகு அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் 15ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

காயமடைந்த பாஜக தொண்டர் ஷியாம் சுந்தர் நிஷாத், காவல் நிலையத்தில் இருப்பதுபோன்ற புகைப்படம் தொடர்பாக அரசு தரப்பில் இருந்து விளக்கம் கோரி, குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாக அரசுத் தரப்பு நீதிபதி திரிபாதி கூறினார்.

பின்னர், அவர் மருத்துவமனையில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. விவசாயிகள் மீது கார் மோதியதையடுத்து, அவர் போராட்டக்காரர்களால் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த புகைப்பட உருவாக்கம் தொடர்பாக அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. புகைப்படத்தன் நம்பகத்தன்மை இன்னும் சரிபார்க்கப்படவில்லை என்று அரசு வழக்கறிஞர் கூறினார்.

சில தடயவியல் அறிக்கைகள் இன்னும் வராததால், அரசுத் தரப்பில் மேலும் 15 நாட்கள் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து விசாரணை தொடர்பான நிலை அறிக்கையை தாக்கல் செய்யும்படி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags:    

Similar News